
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உடன், அசாதுதீன் ஓவைசி அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்பொழுது தெரிகிறதா யார் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்று மோகன் பகவத் பக்கத்தில் அமர்ந்திருப்பது சாட்சாத் உவைசி தான் இன்னும் இவரை முஸ்லிம்கள் நம்புவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தி முஸ்லிம் மீடியா என்ற ஐடி கொண்ட ஃபேஸ்புக் பக்கம் 2022 மார்ச் 13ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசத்தில் பல தொகுதிகளில் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரித்து பாஜக வெற்றிக்கு ஓவைசி துணைபுரிந்தார் என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ் தலைவருடன் ஓவைசி அமர்ந்திருக்கிறார் என்பது போன்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற படத்தில், மோகன் பகவத் உடன் முலாயம் சிங் யாதவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் கிடைத்தது. இந்த படத்தை எடிட் செய்து ஓவைசி படத்தை இணைத்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. முலாயம் சிங் யாதவ் கையில் சில காகிதங்களை வைத்திருக்கிறார். அந்த படம் ஓவைசி இருப்பது போன்ற படத்தில் தனித்து தெரிவதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive
மோகன் பகவத் உடன் முலாயம் சிங் யாதவ் அமர்ந்திருக்கும் புகைப்படம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இல்லத்தில் நடந்த விழாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலின் போது இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் விவாதத்தைக் கிளப்பியது என்றும் தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive
அடுத்ததாக, ஓவைசி படத்தை எங்கிருந்து எடுத்துள்ளார்கள் என்று பார்த்தோம். அந்த படத்தை மட்டும் தனியாக வெட்டி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஓவைசியின் இல்லம் தொடர்பாக வெளியான சில செய்திகளில் அந்த படம் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து தேடிய போது, 2017ம் ஆண்டு இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர், ஓவைசியை சந்தித்த போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது
இதன் அடிப்படையில், மோகன் பகவத் உடன் ஓவைசி அமர்ந்திருந்தார் என்று பகிரப்படும் புகைப்படம் போலியானது, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஓவைசியும் மோகன் பகவத்தும் ஒன்றாக அமர்ந்திருப்பது போன்று பகிரப்படும் புகைப்படம் போலியானது, எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
