
மகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் சமீபத்தில் ராகுல் காந்தியை விமர்சித்த நீதிபதி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசிய ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடுமையான கருத்துக்களை வெளியிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தாவுடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நிலைத் தகவலில், “இருவருக்கும் நடுவில் இருப்பவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா.. இது போன்ற ஆர்எஸ்எஸ் பாஜக ஆதரவு பெற்ற நீதிபதிகள் இருந்தால் ராகுல் காந்திக்கு மட்டுமின்றி பாஜகவை எதிர்கிற அனைவருக்கும் தேச பக்தி பாடம் எடுப்பார்கள்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராகுல் காந்தியை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்று பலரும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்றது போன்று அல்லது அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க இது போன்ற பதிவுகளை பலரும் வெளியிட்டு வருகின்றனர். எனவே, இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் 2022, செப்டம்பர் 11ம் தேதி வெளியிட்டிருந்தது தெரிந்தது. அப்போது அவர் மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருந்துள்ளார்.
உண்மைப் பதிவைக் காண: agrowon.esakal.com I Archive
மகாராஷ்டிராவைச் சார்ந்த உதய் லலித் உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து பம்பாய் உயர்நீதிமன்றம் சார்பில் நடந்த பாராட்டு விழாவின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த உதய் லலித் மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் அப்போது மகாராஷ்டிரா முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, பம்பாய் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தா மற்றும் அப்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
இது முழுக்க பம்பாய் உயர் நீதிமன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியாகும். அதில் மாநிலத்தின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அவரது மனைவியின் படத்தை மட்டும் நீக்கிவிட்டு தவறான அர்த்தம் வரும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். உயர் நீதிமன்ற விழா என்ற உண்மையை மறைத்து, புகைப்படத்தின் ஒரு பகுதியை அகற்றிவிட்டு விஷமத்துடன் பதிவிட்டிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.
முடிவு:
ராகுல் காந்தியை விமர்சித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர், பாஜக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்று பரவும் புகைப்படம் தவறானது என்பதையும் உண்மைப் படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ராகுலை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி பாஜக முதல்வருடன் இருக்கும் புகைப்படம் – உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: Misleading
