
குஜராத் மாநிலத்தில் குடிமைப் பணித் தேர்வில் மாணவர்கள் மிகவும் சாதாரணமாகக் காப்பி அடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடிப்பதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். ஆண்கள், பெண்கள் என அனைவரும் காப்பி அடிக்கின்றனர். தேர்வு அறை பொறுப்பாளரும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “குஜராத்தில் குடிமைப் பணி தேர்வு நடக்கும் லட்சணம்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குஜராத்தில் குடிமைப் பணித் தேர்வில் முறைகேடு நடந்ததாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. மேலும் வீடியோ தெளிவாகவும் இல்லை. பழைய வீடியோ எதையோ எடுத்து பதிவிட்டது போல் உள்ளது. எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை 2024 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இளநிலை சட்டப் படிப்பான எல்எல்பி தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Archive I newsflare.com I Archive
இந்த தகவல் அடிப்படையில் கூகுளில் உத்தரப்பிரதேசம், எல்எல்பி தேர்வு, மாணவர்கள் காப்பி அடித்தனர் என்பது போன்ற சில அடிப்படை வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் இந்தி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியான செய்திகள் கிடைத்தன. அதிலும் உத்தரப்பிரதேசத்தில் நடந்த எல்எல்பி தேர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி என்ற ஊரில் நடந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆங்கில இணைய ஊடகம் ஒன்றில் வீடியோவில் இந்தியில் பேசியதை மொழிபெயர்த்து செய்தி வெளியிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடிய போது தேர்வு முறைகேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்த அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வு மையத்தில் தேர்வுகள் நடத்த 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் செய்திகள் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை, உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தது என்பதை உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
உண்மைப் பதிவைக் காண: zeenews.india.com I Archive
முடிவு:
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2024 பிப்ரவரியில் நடந்த சட்டக் கல்லூரி தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான வீடியோவை குஜராத்தில் குடிமைத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தனர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:குஜராத் குடிமைப் பணித் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
