
‘’உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் என்று அமித் ஷா அதிரடி அறிவிப்பு,’’ எனும் தலைப்பில் வைரலாகப் பரவி வரும் ஏராளமான ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Shyam Shanmugaam என்பவர் இந்த பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், பலரும் இதனை உண்மை என நினைத்து பகிர தொடங்கியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்தவர் தன்னை மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் ஒரு தப்பான செய்தியை ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற பேரில் சமூக ஊடகங்களில் வெளியிட்டதன் மூலம் பொதுமக்கள் பலரையும் திசை திருப்பியுள்ளார்.

ஷியாம் போன்றவர்களுக்கு இது விளையாட்டாக இருந்தாலும், பலரும் இதனை உண்மை என நம்பி பகிர தொடங்கியுள்ளனர். இதனால், ஃபேஸ்புக்கில் அமித் ஷா அதிரடி அறிவிப்பு என்ற தலைப்பில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) அன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இதன் முதலாக, தோனி ஓய்வு பெறுகிறார் என்றும், அமித் ஷா எப்படியேனும் உலக கோப்பையை வென்று இந்தியா எடுத்து வருவார் என்றும், மோடி இந்த விசயத்தை சும்மா விட மாட்டார் என்றும் பலர் வதந்தி பரப்பி வருகிறார்கள்.
இதில் ஒரு வகை வதந்திதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு. அத்துடன், அமித் ஷா உத்தரவின் பேரில் நியூசிலாந்து வீரர்கள் 9 பேர் அந்த அணியில் இருந்து விலகி இந்தியாவிற்காக விளையாடுவார்கள் என்றும் இவர்கள் வதந்தி பரப்புகிறார்கள்.
ஆனால், இது மிக தவறான செயலாகும். திட்டமிட்டபடி, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் ஜூலை 14 (ஞாயிறு) அன்று உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
உண்மை இப்படியிருக்க, இவர்களாகவே வீணான முறையில் அமித் ஷாவை இதில் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்ப தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் முக்கிய பிரமுகர்கள் பலரும் தினசரி ஏதேனும் ஒரு வதந்தியை தனிப்பட்ட தேவைகளுக்காக எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி பதிவிடுகிறார்கள். அதனை சாமானிய மக்களும் உண்மை என நம்பி, வைரலாக ஷேர் செய்ய தொடங்குகிறார்கள். இப்படித்தான் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுகின்றன. இதற்கு நாம் ஆய்வு செய்யும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஒரு மிகச் சிறந்த உதாரணம் என்றால் அது மிகையல்ல.
பொறுப்புணர்வுடன் சமூக வலைதளங்களில் செயல்பட்ட காலம் மலையேறி, அவரவர் விருப்பம்போல ஏதேனும் வெறுப்புணர்ச்சியை மக்கள் மனதில் திணிக்கும் முயற்சியில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.
எனவே, பதிவை வெளியிடுபவர் எத்தகைய விஐபியாக இருந்தாலும் சரி; அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பின், ஷேர் செய்யும்படி பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். இல்லை எனில், சமூகத்தில் வீண் பரபரப்பு ஏற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்க நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு, உண்மை போலவே பகிரப்பட்ட ஒரு வதந்தி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நம்பகத்தன்மையற்ற செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Title:உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் என்று அமித் ஷா அறிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
