
பாகிஸ்தான் ராணுவத்தைத் தனி பலுசிஸ்தான் கேட்டுப் போராடும் பலூச் தீவிரவாதிகள் தாக்கி அழித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராணுவ வாகனங்கள் அணிவகுத்து வரும் போது, அவற்றை ஒட்டு மொத்தமாக தாக்கி அழிப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காலைலயே கண்ணிவெடி வச்சு, பாக் இராணுவ வீரர்கள மொத்தமா தூக்கிருக்கானுங்க பலூச் ஆர்மி. பலூச் எல்லைக்குள்ள வந்தாலே அடிப்போம்னு எச்சரிக்கை வேற கொடுத்திருந்தானுங்க பலூச்🤣” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தானிலிருந்து தனி பலுசிஸ்தான் வேண்டும் என்று பலுசிஸ்தான் பகுதியில் மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சமீப காலங்களில் போராட்டம் தீவிரமடைந்து பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பலுசிஸ்தான் பகுதிக்குள் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தை பலூச் ராணுவம் மொத்தமாகத் தாக்கி அழித்தது என்று வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவில் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தது. பார்க்க மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் மோதல் சம்பவத்தின் வீடியோ போல உள்ளது. எனவே, இது உண்மையில் பாகிஸ்தானில் நடந்ததுதானா அல்லது வேறு வீடியோவை எடுத்து பாகிஸ்தானில் நடந்தது என்று பதிவிட்டுள்ளார்களா என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஏமன் நாட்டில் போராடி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க – பிரிட்டன் படைகளிடம் இருந்து கைப்பற்றிய வாகனங்களைத் தகர்த்துப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர் என்பது போன்று 2024ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் வீடியோ மிகவும் தெளிவாக இருந்தது. அதில் இந்த வீடியோ 2024 மார்ச் 10ம் தேதி எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடிய போது ஏப்ரல் 21, 2024ல் யூடியூபில் வெளியான வீடியோ ஒன்றில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற காட்சிகள் இருந்ததை காண முடிந்தது. அதில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வீடியோவில் 3.07வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சி வந்தது. அதிலும் ஹவுதி படையினர் ராணுவ பயிற்சி மேற்கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பாகிஸ்தானைச் சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய போர் ஒத்திகை வீடியோவை பாகிஸ்தானில் பலூச் விடுதலை ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவ வாகனங்களை தாக்கி அழித்ததாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாக் ராணுவ வீரர்களை அழித்த பலூச் படையினர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
