
உத்தரப்பிரதேசத்தில் 101 அடி உயர காமராஜர் சிலையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறக்கிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “நாளை உபி யில் யோகி ஜி அரசால் திறக்க பட உள்ள 101 அடி காமராஜர் சிலை… இது வரை 200 கும் அதிகமான காமராஜர் சிலைகளை நம் பாரத பிரதமர் மோடி ஜி அரசு திறந்து வைத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைக் காண்டாமிருகம் என்ற ஃபேஸ்புக் ஐடி 2022 டிசம்பர் 16ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
காமராஜருக்கு உத்தரப்பிரதேசத்தில் 101 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதை நாளை (எந்த நாள்???) யோகி அரசு திறந்து வைக்கிறது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். பாஜக, யோகி ஆதித்யநாத்தை நையாண்டி செய்யும் வகையில் யாரோ இதை உருவாக்கியிருக்கலாம் என்று கருதினோம். ஆனால், இதையும் பலரும் பகிர்ந்து வரவே, இதைப் பற்றி ஆய்வு செய்தோம்.
உ.பி-யில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலை என்று பகிர்ந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இப்படி காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். தமிழ்நாட்டிலேயே காமராஜர் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தது இல்லை. ஆனால், நாடு முழுக்க 200 இடங்களில் சிலையை அமைத்துள்ளனர் என்று கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியது. மேலும், உத்தரப்பிரதேசத்தில் அப்படிச் சிலை அமைக்கப்பட்டிருந்தால் அது பற்றி எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கும்.
உண்மையில் அங்கு ரூ.450 கோடி செலவில் 594 மீட்டர் உயரத்துக்கு ராமர் சிலையை அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக முன்பு செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், காமராஜர் சிலை தொடர்பாக எந்த செய்தியும் இல்லை. அப்படி இருக்கும் போது திடீரென்று 101 அடியில் சிலை அமைத்து அதை நாளை திறக்கவும் போகிறார்கள் என்பது நம்பும் வகையில் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: flickr.com I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் இருக்கும் காமராஜர் சிலையைத்தான் உ.பி-யில் அமைக்கப்பட்டுள்ள 101 அடி உயர சிலை என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை என்று குறிப்பிட்டு 2009ம் ஆண்டில் ரமேஷ் நாயர் என்பவர் flickr.com தளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. 2009ல் சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்ட படத்தை எடுத்து 2022ல் உ.பி-யில் அமைக்கப்பட்ட 101 அடி உயர காமராஜர் சிலை என்று வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை புகைப்படத்தை பகிர்ந்து உ.பி-யில் அமைக்கப்பட்டுள்ள 101 அடி உயர காமராஜர் சிலை என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உ.பி-யில் 101 அடி உயர காமராஜர் சிலையை யோகி ஆதித்யநாத் திறக்கிறாரா?
Fact Check By: Chendur PandianResult: False
