
புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியில் இந்த சம்பவம் நடந்தது போன்று பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “புகார் கொடுக்க வந்த பெண்.. கழிவறைக்கு அழைத்துச் சென்று அசிங்கம் செய்த DSP – தீயாக பரவும் வீடியோ” என்று இருந்தது. நிலைத் தகவலில், “என்னதான் நடக்குது.. திமுக ஆட்சியில்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட போலீஸ் டிஎஸ்பி என்று மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று அந்த நியூஸ் கார்டில் இல்லை. எனவே, தமிழ்நாட்டில் நடந்தது போன்ற தோற்றத்தை இந்த நியூஸ் கார்டு உருவாக்குகிறது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பலரும் இந்த சம்பவம் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நடந்தது என்று பதிவிட்டு வருகின்றனர். சிலர் இது ஆந்திராவில் நடந்தது என்றும் பதிவிட்டு வருகின்றனர். “இவங்க தான் அண்ணா யூனிவர்சிட்டி குற்றத்தை கண்டுபிடிக்க போகும் ஸ்காட்லான்ட் யார்ட்” என்று குறிப்பிட்டு சிலர் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முதலில் மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டை அதன் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்தோம். அதிலும் கூட இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடவில்லை. ஆனால், தங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்த செய்தியின் இணைப்பைக் கொடுத்திருந்தனர். அந்த செய்தியில், “கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று இருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை, கர்நாடகாவில் நடந்தது என்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: maalaimalar.com I Archive I zeenews I Archive
தொடர்ந்து இது தொடர்பாக தேடிய போது கர்நாடக டிஎஸ்பி ராமசந்திரப்பா இந்த தகாத செயலில் ஈடுபட்டதாகவும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் கிடைத்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் திமுக ஆட்சியில் போலீஸ் அதிகாரியே பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
மாலைமலர் தான் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டில் எந்த இடம் என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. குறைந்தபட்சம் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களிலாவது உண்மையை சொல்லியிருக்கலாம். எங்கே நடந்தது என்பதை தன்னுடைய இணையதளத்திற்கு வந்து வாசகர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்று செயல்பட்டதால், இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்று விஷமிகள் சமூக ஊடகங்களில் பரப்ப தொடங்கியுள்ளனர்.
முடிவு:
கர்நாடகாவில் டிஎஸ்பி ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவத்தை தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காரணமாக நடந்தது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:தி.மு.க ஆட்சியில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!
Written By: Chendur PandianResult: Misleading
