5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் ஏடிஎம் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறதா?

Government தேசிய அளவில் I National

ஏடிஎம்ல் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எகிறும் ATM கட்டணம் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மே 1 முதல் ATMல் மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்வு – RBI அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஏடிஎம் இயந்திரத்தில் ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தும் போது (பணம் எடுத்தாலோ அல்லது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, மினி ஸ்டேட்மெண்ட் எடுத்தாலோ) கட்டணம் வசூலிக்கப்படும். 20 ரூபாய்க்கு மேல் வங்கிகள் வசூலித்து வருகின்றன. ஆனால், 2 ரூபாய் மட்டும் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது போல தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆங்கில ஊடகங்களில் ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தப்படும் ஏடிஎம் செயல்பாடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.23 வரை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எவ்வளவு ரூபாயிலிருந்து எவ்வளவு உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. எனவே, ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பைத் தேடி எடுத்தோம்.

உண்மைப் பதிவைக் காண: website.rbi.org.in I Archive

அதில், “வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) தகுதியுடையவர்கள். அவர்கள் பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து இலவச பரிவர்த்தனைகளுக்கும் (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) தகுதியுடையவர்களாக உள்ளனர். இதன் படி, பெருநகர மையங்களில் மூன்று பரிவர்த்தனைகள் மற்றும் பெருநகரம் அல்லாத மையங்களில் ஐந்து பரிவர்த்தனைகளும் இலவசமாக செய்துகொள்ளலாம். இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, வாடிக்கையாளருக்கு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹23 கட்டணம் வசூலிக்கப்படலாம். இது மே 01, 2025 முதல் அமலுக்கு வரும்” என்று இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: icicibank.com I Archive

அரசுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்த்தோம். தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் பணம் எடுத்தல் சேவைக்கு ரூ.21ம் இதர பணம் சாராத சேவைகளுக்கு ரூ.8.50ம் பணப் பரிவர்த்தனைக்கு ஏற்ப ஜிஎஸ்டி-யும் வசூலிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: sbi.co.in I Archive

பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில், பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-ஐ பயன்படுத்தினால் ஜிஎஸ்டி-யுடன் ரூ.10ம், இதர வங்கி ஏடிஎம் என்றால் ஜிஎஸ்டியுடன் ரூ.20ம், பணம் சாரா சேவை என்றால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் எனில் இலவசம் என்றும் இதர வங்கி ஏடிஎம் என்றால் ஜிஎஸ்டி-யுடன் 8 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற வங்கிகளிலும் ரூ.20, ரூ.21 வசூலிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது.

இதன் மூலம் எந்த வங்கியிலும் ரூ. 2 வசூலிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. தற்போது ஆர்பிஐ பரிந்துரை அடிப்படையில் ஐந்து முறைக்கு மேற்பட்ட ஏடிஎம் பயன்பாட்டுக்கு ரூ.23 வசூலிக்கப்பட உள்ளது தெளிவாகிறது. பல வங்கிகளில் அதிகபட்சமாக ரூ.21 வரை வசூலிக்கப்படுவதையும் நம்முடைய ஆய்வு உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் தந்தி டிவி உண்மையுடன் தவறான தகவலையும் சேர்த்து வெளியிட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

முடிவு:

5 முறைக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்தினால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.2ல் இருந்த ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் ஏடிஎம் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading