
வங்கதேசத்தில் இந்து இளைஞர் ஒருவரின் நாக்கு மற்றும் கைகளை இஸ்லாமியர்கள் வெட்டினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: X Post I Archive
இளைஞர் ஒருவரின் நாக்கு மற்றும் கைகளை கொடூரமாக வெட்டும் வீடியோ எக்ஸ் போஸ்ட் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தைரியம் உள்ளவர்கள் மட்டும் இதைப் பார்த்தால் போதும். கண்டபின் என்னைக் குறை கூறக் கூடாது 😫😫😫
பங்களாதேஷில் ஹைந்தவ நாமம் சொல்ல உனக்கு இனி நாக்கு வேண்டாம், பூஜை செய்ய உனக்கு இனி கை வேண்டாம் என்று சொல்லி ஜிகாதிகள் செய்யும் கொடுமைகளைப் பாருங்கள் 😭😭😭” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் இந்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று தொடர்ந்து பழைய சம்பந்தமே இல்லாத வீடியோக்களை தீவிர வலதுசாரிகள் பரப்பி வருகின்றன. இந்த வீடியோக்கள் பற்றி தொடர்ந்து ஃபேக்ட் கிரஸண்டோவில் ஃபேக்ட் செக் செய்து வருகிறோம். தற்போது இந்து இளைஞரின் நாக்கு மற்றும் கைகள் வெட்டப்பட்டது என்று வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோவில் உள்ள இளைஞரைப் பார்க்கும் போதே அவர் வங்கதேசத்தைச் சார்ந்தவர் போல இல்லை. தென் அமெரிக்க நாடுகளில் ஏதாவது ஒன்றை சார்ந்தவராக இருப்பது போலத் தெரிகிறது. அவர் இந்து என்பதற்கும் தாக்கியவர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்கும் அடையாளத்தையும் காண முடியவில்லை. மதம் தொடர்பான முழக்கங்கள் இல்லை, பேசுபவர்கள் வங்க மொழியில் பேசுவது போலவும் இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: vk.com I Archive I elparroquianoultimahora I Archive
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை 2019ம் ஆண்டில் சில இணையதளங்களில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் வெனிசுலாவில் இந்த சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடிய போது, 2019ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பதிவிடப்பட்ட சில எக்ஸ் தள பதிவுகள் நமக்குக் கிடைத்தன. அதில், “ஜனவரி 13ம் தேதி, எல் கால்லோவில் உள்ள ஜுவான் ஜெர்மன் ரோசியோ மருத்துவமனைக்கு (Juan Germán Roscio Hospital in El Callao) கண்கள், நாக்கு, கைகள் அகற்றப்பட்ட நிலையில் யின் யான் சுரங்கத்தின் பிரதான சாலையில் கிடந்த இளைஞர் ஒருவரை சுரங்கத் தொழிலாளர்கள் கொண்டுவந்து சேர்த்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வங்கதேசத்தில் 2024 ஆகஸ்டில் உள்நாட்டுக் கலவரத்தைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகுதான் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ 2019ம் ஆண்டில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் வெனிசுலாவில் இந்த சம்பவம் நடந்ததாக பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்தில் இந்து இளைஞரின் நாக்கு, கைகளை இஸ்லாமியர்கள் வெட்டினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வெனிசுலாவில் 2019ம் ஆண்டு இளைஞர் ஒருவரின் நாக்கு மற்றும் கைகள் வெட்டப்பட்ட வீடியோவை 2024ல் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:வங்கதேசத்தில் இந்து இளைஞரின் நாக்கு மற்றும் கைகளை இஸ்லாமியர்கள் வெட்டியதாக பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
