
“வங்கதேச இந்துக்கள் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட கைப் பை ஒன்றை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கொண்டு வந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரியங்கா காந்தியின் கைப் பையில் “I dont care about Bangladeshi Hindus” என்று எழுதப்பட்டிருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் பாதிக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாக ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு சமூக ஊடகங்களில் தீவிர வலதுசாரிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாட்டை ஆளும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததாக, தடுக்க நடவடிக்கை எடுத்ததாக எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் வங்கதேசத்தில் தாக்கப்படும் இந்துக்கள் தொடர்பான பிரச்னையை எழுப்பியிருந்தார். அவர் பேசும் போது, “வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு எதிராக இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும். நமது அரசு வங்கதேச அரசுடன் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive
இந்த நிலையில் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாகப் பிரியங்கா காந்தி பேசவில்லை என்று தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், வங்கதேச இந்துக்கள் பற்றி தனக்குக் கவலையில்லை என்று கைப்பை வைத்திருந்தது போலவும் புகைப்படத்தை வைரலாக பகிர்ந்து வருகின்றனர். வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக அவர் நாடாளுமன்றத்தில் பேசியதன் மூலம் இந்த தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
இந்த புகைப்படம் பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டது என்று தெரிகிறது. இதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடினோம். பிரியங்கா காந்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் பாலஸ்தீனம் என்றும் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பையில் வங்கதேசம் தொடர்பாக இந்தியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்தோம். திங்கட்கிழமை பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா, செவ்வாய்க் கிழமை வங்கதேச சிறுபான்மையினருக்கு ஆதரவான வாசகம் அடங்கிய கைப் பையை எடுத்து வந்தார். அதில், “பங்களாதேஷின் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் நில்லுங்கள்” என்று எழுதப்பட்டிருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு மற்றும் புகைப்படம் இரண்டுமே தவறானது எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கைப்பையை பிரியங்கா காந்தி கொண்டு வந்தபோது எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து, வங்கதேச இந்துக்கள் பற்றி தனக்கு கவலையில்லை என்ற வாசகத்தை சேர்த்து தவறான படத்தை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை” என்று கைப்பை கொண்டு வந்தாரா பிரியங்கா காந்தி?
Written By: Chendur PandianResult: Altered
