
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைத்துள்ள கூடாராம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2
கூடாரங்கள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி விவசாயிகள் போராட்டம் கூடாரங்கள் அமைத்து” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Manisekar MahaKarthi என்பவர் 2021 ஜனவரி 8ம் தேதி பகிர்ந்துள்ளார்.
“கும்பமேலா கூடாரம் அல்ல, டெல்லியில் விவசாயிகள் உருவாக்கிய தற்காலிக தங்குமிடங்கள்…. என்று Krishna Bookstall என்பவர் 2021 ஜனவரி 6ம் தேதி பகிர்ந்துள்ளார். இவர்களைப் போல பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, எதிர்ப்பாகப் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெண்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இது விவசாயிகள் அமைத்த டெண்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் பலரும் தங்கள் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் வாகனங்களில் டெல்லி வந்துள்ளனர். தங்கள் டிராக்டரின் டிரையிலர் வாகனத்தில் கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர். இது தவிர படத்தில் உள்ளது போன்று கூடாரங்களும் அமைத்துள்ளனர்.
இந்த படத்தில் டிராக்டர்கள் எதுவும் காணப்படவில்லை. எனவே, இந்த புகைப்படம் உண்மையில் டெல்லி எல்லையில் விவசாயிகள் தங்கியுள்ள இடத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2013ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்ப மேளாவின் போது எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டு ஒரு இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இதற்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: kerranelamassa.fi I Archive
இருப்பினும் இந்த புகைப்படம் 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டது, இந்த பதிவு 2013ம் ஆண்டு பதிவிடப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை. பதிவு வெளியான தேதி இதில் இல்லை. எனவே, தொடர்ந்து தேடினோம். கூகுளில் கும்பமேளா, டெண்ட் என பல கீ வார்த்தைகள் அடிப்படையில் தேடினோம். அப்போது, alamy.com என்ற தளம் விற்பனைக்கு வைத்திருந்த புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: alamy.com I Archive
alamy.com-ல் இந்த புகைப்படம் 2013 அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். அதை பார்த்த போது, அதுவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படமும் ஒத்துப் போவதைக் காண முடிந்தது. கொடி கம்பம், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடம், நீல நிற டெண்ட், என பலவும் இரண்டு படங்களிலும் ஒத்துப் போயின.

இதன் மூலம் 2013ம் ஆண்டு கும்பமேளா படத்தை 2020-21 விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
2013ம் ஆண்டு கும்பமேளா டெண்ட் புகைப்படத்தை, 2020 -21 விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி வெளியிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கூடாரம் என்று பகிரப்படும் கும்பமேளா படம்!
Fact Check By: Chendur PandianResult: False
