
‘’2020 சென்னை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்,’’ எனக் கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இஸ்லாமியர்கள் சிலர், பொதுமக்களுக்கு உணவு வழங்கக்கூடிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’வேல் யாத்திரை நடத்தியவர்கள், மழைக்கு பயந்து ஓடிவிட்டனர். ஆனால், மக்களின் துயர் துடைக்க பாய் உணவு எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்துவிட்டார்,’’ எனப் பொருள்பட எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாஜக சார்பாக, தடையை மீறி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. நிவர் புயல் காரணமாக, வேல் யாத்திரை சில நாட்கள் ஒத்தி வைக்கப்படுவதாக, பாஜக தமிழக தலைவர் முருகன் அறிவித்திருந்தார்.
அதேசமயம், அவரது அறிவிப்பை பலரும் விமர்சித்து வரும் சூழலில், நிவர் புயல் பெரும் பரபரப்புக்கு இடையே நவம்பர் 25 நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததோடு, பலத்த காற்றும் வீசியது. பொது மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில்தான் மேற்கண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை முதலில், சுந்தரவள்ளி என்பவரும், பிறகு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் என்பவரும் ட்விட்டரில் பகிர்ந்தனர். அதன் பிறகு, பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த புகைப்படம் தற்போதைய 2020 நிவர் புயலை ஒட்டி ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுடன் தொடர்புடையதல்ல. இது, 2015ம் ஆண்டு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டதாகும். அப்போது இஸ்லாமியர்கள் பெரும் அளவில் தன்னார்வலர்களாகக் களத்தில் இறங்கி, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். இந்த செயலுக்கு பல தரப்பிலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இதனைச் சில இஸ்லாமியர்கள் கூட இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக, 07, டிசம்பர் 2015 அன்று Khan Baqavi என்பவர் வெளியிட்ட செய்தி ஒன்றை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இதனைப் பலர் உண்மை புரியாமல், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தற்போதைய 2020 நிவர் புயல் சூழலுடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை பகிர்ந்து, குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மழை, வெள்ளம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்- வைரல் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
