
தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலையில் அரசு பேருந்து உள்ளது என்று தமிழ்நாடு அரசை கிண்டல் செய்யும் வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முன் பக்க கண்ணாடி இல்லாத தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் மீது தனியாக, “தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் காற்றோட்டமான அமெரிக்க பேருந்துகள் தற்போது இயங்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது மிக மோசமான நிலையில் அரசு பேருந்து இயக்கப்படுவதாக தொடர்ந்து பழைய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முன் பக்க கண்ணாடி இல்லாமல் கூட தமிழ்நாடு அரசு பேருந்து இயக்கப்படுகிறது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவை பகிர்ந்து வருபவர்கள் பெரும்பாலும் பாஜக-வினராக உள்ளனர். தி.மு.க அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே, இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் செய்தி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்றை 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி (மார்ச் 29, 2016ல் மீண்டும் அப்டேட் செய்யப்பட்டிருந்தது) தி இந்து ஆங்கில ஊடகம் வெளியிட்டிருந்தது.
அதில், 2015ம் ஆண்டு மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கடையடைப்பின் போது அரசு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கல் வீச்சில் பல அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive
மேலும், போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் தமிழ்நாடு அரசின் டிஎன்எஸ்டிசி பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது என்றும் இந்த புகைப்படத்தை ஷேக்மொஹிதின் என்பவர் எடுத்தார் என்றும் தி இந்து ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் கண்ணாடி உடைந்தாலும் பரவாயில்லை என்று தமிழ்நாடு அரசு இயக்கிய பேருந்து என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
2015ம் ஆண்டு கன்னியாகுமரியில நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கல்வீசியதில் அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்த புகைப்படத்தை எடுத்து, 2024ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அரசு பேருந்தின் அவல நிலை என்று தவறாக பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் மிக மோசமான நிலையில் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து என்று பரவும் புகைப்படம் 2015ம் ஆண்டு நடந்த கல் வீச்சில் கண்ணாடி உடைந்த பஸ் என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel I Instagram

Title:முகப்பு கண்ணாடி இன்றி இயக்கப்படும் தமிழ்நாடு அரசு பேருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
