
890 அரசுப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூட திட்டம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியை இப்போது தி.மு.க அரசு திட்டமிட்டு வருவது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
“10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும்” மற்றும் “ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி” என்று இரண்டு செய்திகளின் புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதன் மீது, “தமிழா விழிடா சந்ததிகளை மதுவுக்கு பின் அடிமை ஆக்கிறது திமுக” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில் “மூட வேண்டியதை திறப்பதும் திறக்க வேண்டியதை மூடுவதும் தான் திராவிட மாடல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாட்டாளி அரசியல் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 29ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் மூன்று எமோஜிக்களை பகிர்ந்து அதன் பின் அடிமை ஆக்குகிறது என்று குற்றம்சாட்டியிருந்தனர். முதலாவதாக கிறிஸ்துமஸ் தாத்தா எம்மோஜியையும் இரண்டாவதாகப் பச்சை முக்காடு போட்ட இஸ்லாமியப் பெண் போன்ற எம்மோஜியையும் மூன்றாவதாக மது கிளாஸ் எம்மோஜியையும் பதிவிட்டிருந்தனர். கிறிஸ்தவர், இஸ்லாமியர், மதுவுக்கு பின்னால் தமிழர்கள் செல்ல திமுக காரணமாக உள்ளது என்று அர்த்தம் வரும் வகையில் பதிவிடப்பட்டிருந்தது.
உண்மையில் இந்த செய்தி இப்போது வெளியானது இல்லை. முந்தைய அதிமுக ஆட்சியில் வெளியான செய்தியை தி.மு.க மீது குற்றம்சாட்டி பகிர்ந்துள்ளனர். 890 பள்ளிகளை மூட எடப்பாடி பழனிசாமி தலைமையிலா அதிமுக அரசு திட்டமிட்டதாக அப்போது செய்தி வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பவே அது கைவிடப்பட்டது. அப்படி ஒரு திட்டமே இல்லை என்று அப்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அறிவித்தார்.
பள்ளிகள் மூடப்படுவது தொடர்பாக தினத்தந்தி வெளியிட்ட அந்த செய்தியையும் 815 மதுக்கடைகளைத் திறக்க 2018ல் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த செய்தியையும் சேர்த்து இப்போது வெளியான செய்தி போல பலரும் பகிர்ந்து வருகின்றனர். பள்ளிகள் மூடல் செய்தியில் தேதி தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், மதுக்கடை திறக்க அனுமதி செய்தியில் 2018ம் ஆண்டு மே 24ம் தேதி அந்த செய்தி வெளியாகி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தெரிந்தும் வதந்தி பரப்பியுள்ளனர்.

உண்மைப் பதிவைக் காண: dailythanthi.com I Archive 1 I dailythanthi.com I Archive 2
இந்த செய்திகளைத் தேடினோம். 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, தினத்தந்தி வெளியிட்டதாக செய்தியின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படம்தான் கிடைத்தன. ஆனால் செய்தி ஏதும் கிடைக்கவில்லை. தினத்தந்தி இணையதளத்தில் 890 பள்ளிகள் மூடல் என்று டைப் செய்து தேடினோம். அப்போது “890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை” என்று தலைப்பிட்டு 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி வெளியான செய்தி கிடைத்தது. ஃபேஸ்புக்கில் சிலர் தினத் தந்தி வெளியிட்டிருந்த செய்தியை சற்று தெளிவாக பதிவிட்டிருந்தனர். அதில் தேதி தெரிகிறதா என்று பார்த்தோம். அதில் 22-5-2018 என்று இருந்தது. இதன் மூலம் இந்த செய்தி 2018ல் வெளியானது என்பது தெளிவாகிறது.
மதுக்கடை திறக்க அனுமதி தொடர்பான செய்தியில் தெளிவாக 2018 மே 24 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தினத் தந்தி வெளியிட்டிருந்த அந்த செய்தியையும் தேடி எடுத்தோம். அதனுடன் 2018ம் ஆண்டு மே மாதம் சமூக ஊடகங்களில் இதே செய்தி ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டிருப்பதையும் தேடி எடுத்தோம்.
நம்முடைய ஆய்வில், 2018ம் ஆண்டு மே மாதம் வெளியான செய்தியை 2023 ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது போன்று, தற்போதைய தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு பள்ளிகளை மூடிவிட்டு, மதுக்கடைகளைத் திறக்க திட்டமிட்டு வருவது போன்று விஷமத்தனத்துடன் பகிரப்பட்டிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பள்ளிகளை மூட எடப்பாடி பழனிசாமி அரசு திட்டமிட்டுள்ளதாக 2018ம் ஆண்டு வெளியான செய்தியை இப்போது திமுக அரசு திட்டமிட்டு வருவது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:890 பள்ளிகளை மூடிவிட்டு 815 மதுக்கடைகளை திறக்கும் திமுக அரசு என்று பரவும் பழைய செய்தி!
Written By: Chendur PandianResult: False
