
டிரோனில் இருந்து ஏவுகணை செலுத்தி இந்தியா சோதனை நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
டிரோனில் இருந்து ஏவுகணை செலுத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி சோதனை வெற்றி . இந்திய ராணுவத்தின் அடுத்த சாதனை..!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) டிரோனில் இருந்து ஏவுகணையை ஏவி இந்தியா சோதனை நடத்தியது. இந்த சோதனை வெற்றி பெற்றதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இந்தியா நடத்திய டிரோனில் இருந்து ஏவுகணை செலுத்தும் சோதனை என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவில் பிறையுடன் கூடிய லோகோ இருந்தது. இந்தியாவின் டிஆர்டிஓ-வின் லோகோ இல்லாமல், பிறை நிலவுடன் லோகோ இருப்பதால் சந்தேகம் எழுந்தது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2021ம் ஆண்டிலேயே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. எனவே, இந்த வீடியோ தற்போது நடந்த சோதனையுடன் தொடர்புடையது இல்லை என்பது தெளிவானது.
துருக்கியைச் சார்ந்த ROKETSAN என்ற ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனம் இந்த சோதனையை நடத்தியதாக 2021ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி வெளியான யூடியூப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலும் ROKETSAN என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வீடியோவின் மற்றொரு பக்கத்தில் SSB என்று லோகோ ஒன்று இருந்தது. அது என்ன என்று ஆய்வு செய்து பார்த்தபோது, அது துருக்கி அரசின் பாதுகாப்பு தொழிலக செயலகம் (Türkiye’s Defense Industries Secretariat) என்று தெரியவந்தது. அதன் இணையதள பக்கத்தில் அந்த லோகோவும் இருந்தது.
இந்தியாவும் அப்படி ஒரு சோதனை நடத்தியது உண்மைதான். ஆனால், வீடியோ இந்தியா நடத்திய சோதனையின் வீடியோ இல்லை. 2021ல் துருக்கி நடத்திய டிரோனில் இருந்து ஏவுகணை செலுத்தும் சோதனையின் வீடியோவை இந்தியாவின் டிஆர்டிஓ நடத்திய சோதனை என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டிரோனில் இருந்து ஏவுகணை செலுத்தி துருக்கி மேற்கொண்ட சோதனையின் வீடியோவை இந்தியா நடத்திய சோதனை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி இந்தியா நடத்திய சோதனை என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
