விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி செய்தியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லவோ, நீர் நிலைகளில் கரைக்கவே அனுமதியில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “வன்மையாக கண்டிக்கிறேன் இந்து மதம் இழிவு படுத்தும் நோக்கம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Srinivasan Iyengar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைப்பதும் அதை பின்னர் ஊர்வலம் நடத்தி நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம். இந்த ஆண்டு சிலை அமைக்கத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தமிழ்நாடு அரசு வெளியிட்டதாகச் செய்தி இல்லை. 

அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்ற கணிப்பு அடிப்படையில் விடுமுறை அளித்திருந்தது. ஆனால், விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை வருகிறது எனவே, அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது. அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்திக்குத் திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

உண்மை நிலை இப்படி இருக்க, விநாயகர் சிலை அமைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது போல பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த செய்தியைப் பார்க்க உண்மையானது போல உள்ளது. ஆனால், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு போல இல்லை. கொரோனா காலகட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு போல உள்ளதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தில் உள்ள தகவலை அப்படியே டைப் செய்து ஃபேஸ்புக்கில் தேடினோம். அப்போது 2021ம் ஆண்டு இந்த செய்தியைத் தந்தி டிவி வெளியிட்டிருப்பது தெரிந்தது. அந்த செய்தியை பார்த்தோம். அதில் கொரோனா பரவலை முன்னிட்டு இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், தந்தி டிவி-யில் கேட்டோம். அவர்கள் “இது 2021ல் வந்த செய்தி” என்று உறுதி செய்தனர்.

2021ல் கொரோனா காலத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை 2023ம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கான அறிவிப்பாக விஷமத்தனமாக பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2023ம் ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த நேரத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தியை இப்போது வெளியான அறிவிப்பு போல தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?

Written By: Chendur Pandian 

Result: False