நாக்பூரில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

நாக்பூரில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திங்கள்கிழமை நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே குல்தாபாத் என்ற சிறிய ஊரில் உள்ள தர்கா வளாகத்தில் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறை உள்ளது. அவர் 1707ம் ஆண்டு இறந்துவிட்டார். அவரது கல்லறையை அகற்ற வேண்டும் என்று 300 ஆண்டுகள் கழித்து இப்போது தீவிர இந்துத்துவா வலதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கலவரம் வெடித்தது.

இந்த நிலையில், நாக்பூரில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடத்திவிட்டு வந்த இஸ்லாமிய மாணவர்களை போலீசார் தாக்கியதாக வீடியோ ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பார்த்த போது இருசக்கர வாகனத்தின் பதிவு எண் சற்று மங்கலாகத் தெரிந்தது. அதில் மத்திய பிரதேசம் என்பதை குறிக்கும் வகையில் MP என்று இருந்தது. இருப்பினும் அது MPஆ அல்லது MH-ஆ என்பதைத் துல்லியமாக கண்டறிய முடியவில்லை.

ண்மைப் பதிவைக் காண: instagram.com

எனவே, இந்த வீடியோ பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2022ம் ஆண்டு ஏப்ரலில் இந்த வீடியோவை சிலர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ இப்போது நடந்த நாக்பூர் கலவரத்துடன் தொடர்புடையது இல்லை என்பது தெளிவானது.

தொடர்ந்து தேடிய போது, 2022ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் கர்கோன் (Khargone) என்ற இடத்தில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் என்று குறிப்பிட்டு சிலர் பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து தேடிய போது, 2022ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி கர்கோனில் ராமநவமி ஊர்வலத்தைத் தொடர்ந்து இரு சமூகத்தினருக்கு இடையே கலவரம் வெடித்தது என்று செய்திகள் கிடைத்தன. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ நாக்பூரைச் சார்ந்தது இல்லை என்பது உறுதியாகிறது.

முடிவு:

நாக்பூரில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து தொழுகை நடத்திவிட்டு வந்த மாணவர்களை தாக்கிய போலீஸ் என்று பரவும் வீடியோ 2022ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:நாக்பூரில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False