வங்கதேச உள்நாட்டு கலவரத்தில் இஸ்கான் கோவிலை தாக்கிய இஸ்லாமியர்களுக்கு தற்போது வெள்ள பாதிப்பின் போது உதவிகள் வழங்கிய இஸ்கான் பக்தர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வங்கதேசத்தில் தாக்குதலுக்கு ஆளான இந்து கோவில் மற்றும் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியது என்று இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்த வீடியோ பதிவு உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழில், "ஒரு வாரத்திற்கு முன்பு, சில பங்களாதேஷ் வஹாபிஸ்டுகள் இஸ்கான் கோயிலைத் தாக்கி தெய்வங்கள் உள்பட அனைத்தையும் சேதப்படுத்தினர். ஆனால் இப்போது... ஆனால் இந்த வாரம் வங்கதேச வெள்ளத்தில் சிக்கிய அவர்களுக்கு இஸ்கான் பக்தர்கள் உணவுளை வழங்கி வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே தகவல் ஆங்கிலத்திலும் இருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் இடஓதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான பிரச்னை காரணமாக உள்நாட்டு கலவரம் வெடித்தது. அந்நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். அந்த நேரத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டு, தீவைக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் இஸ்கான் கோவிலை தாக்கினார்கள் என்றும் ஆனால் பதிலுக்கு இஸ்கான் பக்தர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு உதவிகள் செய்தார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். இந்து கோவில் தாக்கப்பட்ட வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதுதான். ஆகஸ்ட் 2024 முதல் வாரத்திலிருந்து இந்த வீடியோவை பார்த்து வருகிறோம். முன்னணி ஊடகங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டு வந்திருந்ததைக் கண்டிருந்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

மக்களுக்கு உதவி செய்யும் வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா என்று அறிய அந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2022ம் ஆண்டில் இந்த வீடியோவை இஸ்கான் அமைப்பே ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அது மட்டுமல்லாமல் வேறு சில இந்து அமைப்புகளும் கூட இந்த வீடியோவை 2022 ஜூன் 22ம் தேதி பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் மீது தாக்குதல் சம்பவம் 2024 ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடந்தது. வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு 2024 ஆகஸ்ட் 21ம் தேதி ஏற்பட்டது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அதாவது 2022ம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது தாக்குதலுக்குப் பிறகு இந்த உதவி வழங்கும் வீடியோ எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2022ம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்கான் பக்தர்கள் உதவிகள் செய்த வீடியோவை எடுத்து 2024ல் தங்களைத் தாக்கியவர்களுக்கு உதவிகள் வழங்கிய இஸ்கான் பக்தர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேச இஸ்லாமியர்களுக்கு வெள்ள பாதிப்பில் உதவிய இஸ்கான் பக்தர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False