
மாநில சுயாட்சி பற்றி பேச வேண்டும் என்றால் புராணம் படித்து, ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இதெல்லாம் புராணம் படிக்கனும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை, இந்த மாதிரியான கதை எல்லாம் படிச்சி சொல்லனும்னா பெரிய ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வு செய்தால்தான் இது உண்மையா பொய்யா என்பது தெரியும். அதுக்கு நான் உட்பட்டவன் இல்லை. போய் அவரைத்தான் கேட்கனும். அவர்கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை என்கிட்ட கேட்டா எப்படி தெரியும். அறிஞர்களிடம் கேட்டால்தான் அது சரியா, தவறா என்று தெரியும்” என்கிறார்.
நிலைத் தகவலில், “மாநில சுயாட்சி தீர்மானம்.. ~ அதிமுக வெளிநடப்பு. மாநில சுயாட்சி குறித்து பேசோனும்னா புராணம் படிக்கோணும்.ஆய்வு பண்ணோனும். நான் அந்தளவுக்கு படிச்சவன் இல்ல நமக்கு அந்த அளவுக்கு அறிவு இல்ல. அதான் வெளிநடப்பு செஞ்சுட்டோம்.-தவழ்ந்தப்பாடியார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே, எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. இந்த சூழலில் மாநில சுயாட்சி தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தது போன்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ திராவிடம் ஆரியம் தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் ஆகும். இந்த வீடியோவை வைத்து முன்பு ஒரு முறை வதந்தி பரப்பப்பட்டது. பெரியார் பற்றி சீமான் பேசியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு இப்படி எடப்பாடி பழனிசாமி பதில் கூறியதாகவும் வதந்தி பரப்பப்பட்டது. அப்போதே இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது அதே வீடியோவை வைத்து மாநில சுயாட்சி தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தது போன்று தவறாகப் பகிர்ந்துள்ளனர். நியூஸ் 18 வெளியிட்டிருந்த உண்மையான வீடியோவை தேடி எடுத்தோம். 2023ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இந்த வீடியோவை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்தது. “ஆரியம், திராவிடம் இருக்கிறதா, இல்லையா என அறிஞர்கள்தான் கூற வேண்டும்; நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்று தலைப்பும் வைத்திருந்தனர்.
அது மட்டுமின்றி வேறு பல ஊடகங்களும் கூட இந்த பேட்டியை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டிருந்தன. இவை எல்லாம் மாநில சுயாட்சி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியது என்று பரவும் வீடியோ தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
2023ம் ஆண்டு ஆரியம் – திராவிடம் பற்றி ஆளுநர் ரவி பேசியது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலை மாநில சுயாட்சி தொடர்பாக அளித்த பேட்டி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மாநில சுயாட்சி பற்றி பேச புராணம் தெரிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
