
பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடந்த பொது மேடையில் இந்தியாவை பயங்கரவாத நாடு என்று இஸ்லாமியர் ஒருவர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
எக்ஸ் தளத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் ஒன்றின் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழகத்தில் பொது மேடையில், இந்தியாவை “பயங்கரவாத நாடு” என சொல்லும், இந்த இஸ்லாமிய தீவிரவாதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்ம சிறுபான்மையினர் அதனால் நம்ம என்ன பேசினாலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காது என்ற திமிரில் எப்படி பேசுறானுங்கன்னு பாருங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை இந்தியா தொடங்கி முடித்தது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்தியாவை பயங்கரவாத நாடு என்று அவர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கூட்டம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடத்தப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: hindupost.in I Archive
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது 2023ம் ஆண்டில் இருந்தே இந்த வீடியோ தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி ஆதரவு ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் தற்போது நடந்த இந்தியா – பாகிஸ்தான் போர் சம்பவத்திற்கும் இந்த வீடியோவுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. வீடியோவை முழுமையாக பார்க்கும் போது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடந்ததாக அந்த மேடையிலிருந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்த கூட்டம் நடத்தப்பட்டதாகப் பகிரப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.
இந்தியா பயங்கரவாத நாடு என்று அவர் பேசினாரா இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. உலகத்தில் ஒரு நாடு பயங்கரவாத நாடாக இருக்கும் என்றால் முதலாவதா இஸ்ரேல், இரண்டாவது நாடு எது என்று கேட்டால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாடு என்று சொல்லலாம். நான் இந்தியா என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் இந்தியா என்றைக்கும் சமாதானத்தின் பக்கம் நின்றிருக்கிறது” என்று அவர் கூறுகிறார். இந்தியாவை கூற மாட்டேன் என்று அவர் நாம் வாழும் நாடு என்று மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிடுகிறார். அப்படி மறைமுகமாக அவர் இப்போதைய ஆட்சியாளர்களை அப்படிக் கூறினாரா, ஏன் அப்படிச் சொன்னார் என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. நேரடியாக சொன்னாலும் மறைமுகமாகச் சொன்னாலும் அவர் சொன்னது மிகத் தெளிவாக உள்ளது.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 2023ம் ஆண்டு இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திய வீடியோவை பாகிஸ்தான் போர் முடிந்த சூழலில் தமிழ்நாட்டில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கூட்டம் நடந்தது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் தவறான தகவலையும் கொண்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
2023ல் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் ஒருவர் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோவை எடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கூட்டம் நடத்தப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult:Partly False
