“செனாப் நதியைத் திறந்து பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய மோடி” என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

செனாப் நதியை திறந்து 10 பைசா செலவில்லாமல் பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய பிரதமர் நரேந்திர மோடி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

திடீரென்று வரும் காட்டாற்று வெள்ளத்தில் லாரிகள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதி..🌊🌊 𝟭𝟬 பைசா செலவில்லாம மரண பயத்தை காட்டும் நரேந்திர மோடி ஜி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உருவாகி ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தானில் பாயும் செனாப் நதி அணையிலிருந்து வெளியேறும் நீரை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் பாகிஸ்தானில் செனாப் நதி வறண்டது. மூடப்பட்ட அணையிலிருந்து செனாப் நதியில் திடீரென்று தண்ணீர் திறந்துவிட்டு பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சேதத்தைப் பிரதமர் நரேந்திர ஏற்படுத்திவிட்டார் என்று வீடியோ ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை 2025 ஏப்ரல் 12ம் தேதியிலிருந்து ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பலரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், ஷாஹர்-இ-போஸோர்க் (Shahr-e-Bozorg) நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஆற்றில் சுரங்கம் அமைத்து மணல், கற்களைக் கடத்தி வந்த வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive

பஹல்காம் தாக்குதல் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்தது. அதன் பிறகுதான் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே இந்த வீடியோவை பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். 

Archive

செனாப் நதியில் நீர் நிறுத்தப்பட்டதாக மே 5ம் தேதிதான் செய்தி வெளியானது. மேலும், தண்ணீர் திறக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. செனாப் நதியில் தண்ணீர் நிறுத்தப்படுவதற்குக் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு முன்பே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை நம்முடைய ஆய்வு உறுதி செய்கிறது. இவை எல்லாம், மோடி எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தானின் செனாப் நதியில் வெள்ளம் ஏற்பட்டது என்று பரவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தவறானது என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரை நிறுத்திவிட்டு பின்னர் திடீரென்று திறந்து திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தி பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிவிட்டார் நரேந்திர மோடி என்று பரவும் வீடியோ ஆப்கானிஸ்தானைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“செனாப் நதியைத் திறந்து பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய மோடி” என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False

Leave a Reply