
ஹாலிவுட் நடிகரும் WWE பிரபலமுமான தி ராக் டுவைன் ஜான்சன் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போலவும், அவர்களிடம் சனாதனம் குறித்து பேச பெரியாரிய ஆதரவாளர்களுக்குத் தைரியம் உள்ளதா என்று கேட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
WWE, ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் காவி உடை அணிந்து, கையில் ஜெய் ஶ்ரீராம் கொடியுடன் கும்பமேளாவில் பங்கேற்றது போன்று புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் சொறியான் வேஸ்ட்களா, எங்க இவங்க கிட்ட போய் பகுத்தறிவு, சனாதன ஒழிப்புன்னு பேசுங்கலே பார்ப்போம் மவனே கிட்னா தாண்டி
அடேய் கரு பழனியப்பன், தெரு முருகன் காந்தி, அமீர் & சுந்தரவள்ளி குரூப் அடிமைஸ் #கும்பமேளா #வாசன்_Vassan” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டுவைன் ஜான்சன் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்பட நடிகர் மற்றும் WWE மல்யுத்த வீரர்கள் பலரும் உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்றது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. பார்க்கும் போதே இவை எல்லாம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிகிறது. ஆனால், அது கூட தெரியாமல் இவர்கள் எல்லாம் குறிப்பிட்ட மதத்தின் மீது ஈர்க்கப்பட்டு, காவி உடை அணிந்து கும்பமேளாவில் புனித நீராடியது போன்று உணர்ச்சிப் பெருக்குடன் பதிவிட்டு வருகின்றனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்தில் ஜெய் ஶ்ரீராம் என்பதே எழுத்துப்பிழையுடன் உள்ளது. இவ்வளவு பிழையுடனா பிரபலங்கள் கொடியைக் கையில் வைத்திருப்பார்கள்… பொதுவாக ஏஐ புகைப்படங்கள் உருவாக்கும் பொழுது வார்த்தைகளில் பிழைகள் ஏற்படும். இந்த புகைப்படத்தில் எழுத்துப்பிழையே இது போலியான புகைப்படம் என்று உறுதி செய்கிறது.
இந்த புகைப்படம் உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்ய ஆய்வைத் தொடர்ந்தோம். முதலில் புகைப்படங்களில் உள்ள பிரபலங்கள் யாராவது தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அவர்கள் யாரும் இந்தியாவுக்கு வந்ததாக செய்தி இல்லை. அடுத்ததாக இந்த புகைப்படங்கள் எல்லாம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய, ஏஐ படங்களைக் கண்டறிய உதவும் இணையதளங்களில் இந்த புகைப்படங்களைப் பதிவேற்றிப் பார்த்தோம். அவை இந்த புகைப்படங்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதி செய்தன.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த புகைப்படத்தை யார் உருவாக்கினார்கள் என்று அறிய இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். பலரும் இந்த புகைப்படங்களை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
இவற்றுக்கு நடுவே Wrestling Community என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் WWE பிரபலங்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஓவைசி உள்ளிட்ட பலரும் கும்பமேளாவில் பங்கேற்றது போன்ற புகைப்படங்களை பதிவிட்டிருந்தனர். அந்த ஃபேஸ்புக் கம்யூனிட்டி சுயவிவர குறிப்பு பகுதியில் இவை எல்லாம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள். ரெஸ்லிங் பிரபலங்களின் ஏஐ புகைப்படங்கள் இவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கும்பமேளா தொடர்பாக ஏராளமான புகைப்படங்களை இவர்கள் ஏஐ மூலம் உருவாக்கி பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
Wrestling Community என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான ஏஐ புகைப்படங்களை எடுத்து. தைரியம் இருந்தால் இவர்களிடம் சென்று சனாதனம் பற்றி பேச முடியுமா என்று சவால் விட்டிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கும்பமேளாவில் தி ராக் உள்ளிட்ட மல்யுத்த பிரபலங்கள் பங்கேற்றதாக பரவும் புகைப்படங்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:‘தி ராக்’ டுவைன் ஜான்சன் உள்ளிட்டோர் கும்பமேளாவில் பங்கேற்றனரா?
Written By: Chendur PandianResult: False
