
இந்தியாவின் ரஃபேல் விமானம் பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தரையில் விழுந்து நெருங்கிக் கிடக்கும் போர் விமானத்தை, ஹெலிகாப்டர் உதவியுடன் தூக்குவது போன்று வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்ஸ் தயாரிப்பு இந்தியாக்கு கொள்வனைவு செய்த பல கோடி பெறுமதியான ராபால் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது இப்போ கட்டி இழுக்கபடும் விமானம் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மே 7, 2025 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால், இந்தியா தரப்பில் எந்த விமானமும் சுடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பார்க்கும் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ போல உள்ளது. ஹெலிகாப்டரின் விசிறிகள் சுற்றுவதைப் பார்க்கும் போது இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மே 3ம் தேதியே இந்த வீடியோவை சிலர் பகிர்ந்திருந்ததைக் காண முடிந்தது. அதில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அதை அவர்கள்தான் உருவாக்கினார்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
இந்த புகைப்படங்களை ஏஐ கண்டறியும் தளத்தில் பதிவேற்றிப் பார்த்தோம். அதில், 100 சதவிகிதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று அது தெரிவித்தது. பாகிஸ்தான் மீதான தாக்குதலை மே 7ம் தேதி இந்தியா தொடங்கியது. அது தொடர்பான செய்தி மே 8ம் தேதிதான் தெரியவந்தது. ஆனால், இந்த வீடியோவோ மே 3ம் தேதியே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக சமூக ஊடகங்களில் வெளியான ஏஐ வீடியோ இந்தியாவின் ரஃபெல் விமானம் பாகிஸ்தானில் நொறுங்கிக் கிடக்கிறது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:இந்தியாவின் ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
