
தன்னை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் திருடி சம்பாதித்து சொத்து சேர்த்த வழக்கை விரைவில் விசாரித்து என்னை கைது செய்ய வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த பதிவை Arivalagan G. என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 ஜூலை 28 அன்று பகிர்ந்திருந்தார். இவரைப் போல பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை என்று கூறி சமீபத்தில் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின் படத்தை எடிட் செய்து விஷமத்தமான தகவல் சேர்த்து சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. எதிலிருந்து எடிட் செய்யப்பட்டது என்பதை ஆய்வு மூலம் கண்டறிய முடிவு செய்தோம். அதன் படி அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில் போராட்டம் தொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார். கூட்டமாக இருக்கும் ஒரு புகைப்படத்துடன் இந்த புகைப்படம் ஒத்துப்போனது. அந்த படத்தில் அவர் கையில் வைத்திருந்த பலகையில், “நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க அரசைக் கண்டிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் தமிழ் சமயம் உள்ளிட்ட பல ஊடகங்களிலும் இந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து, வாசகத்தை மட்டும் எடிட் செய்து மாற்றி, விஷமத்தனமான வாசகத்தைச் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

அசல் பதிவைக் காண: samayam.com I Archive
முடிவு:
சொத்து சேர்த்த வழக்கில் தன்னை கைது செய்ய வேண்டும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்தார் என்று பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதைதகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சொத்து சேர்த்த வழக்கில் தன்னை கைது செய்ய கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
