மாட்டுக்கறி சாப்பிடுவேன்… சாப்பிட மாட்டேன் என்று மாற்றி மாற்றி பேசினாரா திருமாவளவன்?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று ஒரு இடத்திலும், மாட்டுக்கறியை சாப்பிட்டதே இல்லை என்று மற்றொரு இடத்தில் இடத்திற்கு ஏற்ப, மாற்றிப் பேசிய திருமாவளவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

திருமாவளவனின் இரண்டு வெவ்வேறு வீடியோக்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அதுவும் திருமா, இதுவும் திருமா. ஒரு முட்டெலும்புவது கடித்தால்தான் வெறியே அடங்கும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

உண்மை அறிவோம்:

“நமக்கு நாலு துண்டு கறியை விழுங்கினாத்தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்” என்று மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோவையும் நான் மாட்டுக்கறி சாப்பிட்டது இல்லை என்று அவர் பேசிய மற்றொரு வீடியோவையும் வைத்து நியூஸ் கார்டு டிசைனில் பதிவு ஒன்றை ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். கடைசியில் 24 வருஷமாக சைவ உணவு சாப்பிடுகிறேன் என்று திருமாவளவன் கூறிய காட்சியையும் இணைத்துள்ளனர். இதை பார்க்கும் போது திருமாவளவன் மாற்றி மாற்றிப் பேசுவது போல் தோற்றம் வருகிறது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ முழுமையாக இல்லாததால் கூகுளில் திருமாவளவன், மாட்டிறைச்சி என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற வீடியோக்கள் எளிதாகக் கிடைத்தன.

“thirumavalavan speech about Beef” என்று குறிப்பிட்டு முதல் வீடியோ 2022 ஆகஸ்ட் 27ம் தேதி யூடியூபில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றி திருமாவளவன் பேசியிருந்தார். அதை பார்த்தோம். அந்த வீடியோவில் 2.09வது நிமிடத்தில், “நான் சாப்பிடுறது இல்லை, இருந்தாலும் சொல்றேன். நான் சின்னப்பிள்ளையில இருந்தே மாட்டுக்கறி சாப்பிட்டது கிடையாது. இப்போ மற்றக் கறியை நிறுத்தி 17 வருஷம் ஆச்சி. 

நான் சுத்த சைவம். ஆனால், மாட்டுக்கறி ஆதரவாளன். மாட்டுக்கறி விருந்துக்கு ஆதரவாளன். கறி உணவுக்கு ஆதரவாளன். எனக்கு ஒத்துக்கலை அதனால சாப்பிடல. ஜீவகாருண்யம் எல்லாம் கிடையாது. வள்ளலார் வழியில் நான் மாட்டுக்கறியை தின்பதையோ, மற்றக்கறியை தின்பதையோ நான் தவிர்த்துவிட்டேன் என்று கூறவில்லை. எனக்குப் பிடிக்கவில்லை அவ்வளவுதான். உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை” என்று கூறியிருந்தார்.

திருமாவளவன் பேசிய வீடியோவை முழுமையாக வெளியிட்டிருந்தால் திருமாவளவன் தான் சிறு வயதில் இருந்தே மாட்டுக்கறி சாப்பிட்டது இல்லை என்று கூறியிருந்தது வெளிப்பட்டுவிடும் என்று அந்த பகுதியை மட்டும் எடிட் செய்துள்ளனர். 

திருமாவளவன் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு ஆதரவாக திருமாவளவன் பேசிய வீடியோவை எடுத்து எடிட் செய்து விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மாட்டிறைச்சி உண்பதற்கு ஆதரவாக திருமாவளவன் பேசிய வீடியோவில் நான் மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை என்று கூறிய பகுதியை நீக்கிவிட்டு விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:மாட்டுக்கறி சாப்பிடுவேன்… சாப்பிட மாட்டேன் என்று மாற்றி மாற்றி பேசினாரா திருமாவளவன்?

Fact Check By: Chendur Pandian 

Result: False