
தமிழ்நாட்டை மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அன்புமணி ராமதாஸ் புகைப்படத்துடன் கூடிய மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் டெல்லி நிர்வாக மசோதாவை பாமக ஆதரித்தது – அன்புமணி ராமதாஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டுடன் கூடிய பெரிய பதிவை Mohamed Basith என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 9ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டை மூன்று யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டு பார்க்க மாலை மலர் வெளியிட்டது போல இருந்தாலும், அதன் பின்னணி டிசைன், வாட்டர்மார்க் போன்றவற்றில் வித்தியாசத்தைக் காண முடிந்தது. யூனியன் பிரதேசமாகப் பிரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோராது. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானதாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்தது. எனவே, இதை உறுதி செய்ய மாலை மலர் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை.
எனவே, மாலை மலர் ஆசிரியர் குழுவுக்கு இந்த புகைப்படத்தை வாட்ஸ்அப்-ல் அனுப்பி வைத்தோம். அவர்கள் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தனர். உடனடியாக இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாட்டை மூன்று யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஆதரவு அளித்தேன் என்று அன்புமணி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வேண்டும் என்று அன்புமணி கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
