தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரியை ஒருவர் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

காவலர் ஒருவர் கடை ஒன்றுக்குள் நுழைகிறார். அருகில் நின்றிருந்த நபர் திடீரென்று கட்டையால் அந்த காவலரைத் தாக்குகிறார். உடன் மற்ற காவலர்கள் வந்த அந்த நபரை பிடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "என்னடா தமிழ்நாட்டுல போலிஸ்க்கே இதான் நிலமையாடா....😥😥😥

அப்போ சாதாரண மக்களின் நிலை....???" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். ஆனால், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. மேலும் காவலர்களைப் பார்க்கும் போது தமிழக காவல் துறையைச் சார்ந்தவர்கள் போலத் தெரியவில்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்தது என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. இந்த சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள கூடூரில் நடந்தது என்று ஆந்திராவில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

உண்மைப் பதிவைக் காண: rkagninews.com I Archive1 I indiatoday.in I Archive 2

கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலாக பணியாற்றி வருபவர் சுவாமிதாஸ். சம்பவத்தன்று தேநீர் அருந்த அந்த கடைக்கு வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த லல்துக் கலிந்தா (Laltuk Kalinda) என்ற நபர் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தலைமைக் காவலர் சுவாமிதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

மேலும் இந்த சம்பவம் மது போதையால் நிகழ்ந்துள்ளது என்று கூடூர் காவல் துணை கண்காணிப்பாளர் சூர்யநாராயண ரெட்டி கூறியதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றும் செய்திகள் தெரிவித்தன.

சில வீடியோக்களில் சம்பவம் நடந்த போது பதிவான வேறு சிசிடிவி காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் கடைகளின் பெயர்ப் பலகையில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை என்பதை உறுதி செய்தன.

நம்முடைய ஆய்வில், காவலர் தாக்கப்பட்ட சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் போலீஸ் நிலை இதுதான் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆந்திராவில் காவலர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோவை எடுத்து வந்து தமிழ்நாட்டில் நடந்ததாக சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:போலீஸ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False