
‘’பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம்,’’ என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் – அண்ணாமலை. இன்று என் சாட்டையடி போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னைப் பின்பற்றி, பாஜகவின் உண்மைத் தொண்டர்களும் இனி செருப்பு அணிய வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை சமீபத்தில் அறிவித்தார்.
இது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின்கீழ் பெண்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர், என்றும் குற்றம்சாட்டி தன்னைத் தானே சவுக்கில் அடித்துக் கொண்டு, அதிருப்தியை வெளிப்படுத்தினார் அண்ணாமலை.
அண்ணாமலையின் இந்த செயல், தமிழ்நாடு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், தன்னைப் பின்பற்றி பாஜக தொண்டர்கள் அனைவரும் காலில் செருப்பு அணியக்கூடாது என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாகக் கூறி மேற்கண்ட வகையில் சிலர் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இதுபோன்று அண்ணாமலை எந்த வேண்டுகோளும் வெளியிடவில்லை.
உண்மையில், புதிய தலைமுறை பெயரில் போலியான நியூஸ் கார்டு ஒன்றை இவ்வாறு உருவாக்கி, திமுக ஆதரவாளர்கள் பரப்பி வரும் வதந்திதான் இது.
இதுதொடர்பாக, பாஜக ஐ.டி., பிரிவு நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மற்றும் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி தரப்பிலும் பேசி நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்று எந்த நியூஸ் கார்டும் காண கிடைக்கவில்லை.
மேலும், நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டில் 27.12.2024 அன்று பிற்பகல் 2:30 மணி என்று நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தகவல் தேடியபோது, அதே நேரத்தில் புதிய தலைமுறை வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டின் லிங்க் நமக்கு கிடைத்தது. அதனையும், போலியான நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?
Written By: Pankaj IyerResult: False
