
மோடி, அமித்ஷா மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கிட்டத்தட்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்று தோற்றம் அளிக்கும் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் நிகழ்ந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ மீது, “1500 லிட்டர் மிளகாய் பொடியை அறைத்து ஊற்றி அபிஷேகம். அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் பக்திப் பரவசம்!!” என்று எழுதப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “தன் பதவியை பறித்த அமித்ஷா மோடி அதற்கு காரணமாக இருந்த பன்னிச்சாமி பாஜக அதிமுக கூட்டம் நாசமாக போகவேண்டும் என்று மிளகாய் பொடி குளியல் நடத்தி சாமியை வேண்டிய அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
இதே வீடியோவை வேறு சிலர், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று தங்கள் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றும். தனக்கு வரமிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து முருகனை மனமுருகி வேண்டிய காட்சி.
இதுபோன்ற கடுமையான வேண்டுதல்களை தற்போதைய தலைவராக உள்ளவரும் பழைய தலைவர்களும் செய்ய துணிச்சல் இருக்கிறதா என்று அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள் கிடுக்கிப்பிடி கேள்வி” என்று குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தன்னுடைய பதவியைப் பறித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகவும் அ.தி.மு.க – பாஜக கூட்டணி முறிய வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மிளகாய்ப் பொடி அபிஷேகம் செய்து வழிபட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுத் தான் முதலமைச்சராக வேண்டும் என்று தனக்குத் தானே மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து கொண்டார் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவில் உள்ள நபரைப் பார்க்கும் போது அண்ணாமலையின் சாயல் தெரிகிறது. ஆனால், அண்ணாமலை இல்லை என்பது தெரிகிறது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம். வீடியோவில் V தமிழ் என்று லோகோ இருந்தது. அப்படி ஏதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். vthamizhdigital என்ற பெயரில் அப்படி ஒரு பக்கம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருந்தது. அதில், ஏப்ரல் 29, 2025 அன்று இந்த வீடியோ வெளியாகி இருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive
அதில், “சென்னைப் பெரும்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் உள்ள வள்ளி – தெய்வயானை வெற்றிவேல் முருகன் கோவிலில், சித்திரை திருக்கார்த்திகை நாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது என்று அந்த ஊடகம் குறிப்பிடவில்லை.
கூகுளில், மிளகாய்ப் பொடி கரைசல், அபிஷேகம் என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது தந்தி டிவி, வேந்தர் நியூஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் வெளியான செய்தி நமக்கு கிடைத்தது. அதில், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள முருகன் கோவிலில் அருள் வந்த பக்தர் ஒருவருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டது. பாஜக ஆதரவு ஊடகமான வின் டிவி-யிலும் கூட இந்த செய்தி வெளியாகி இருந்தது. அதிலும் கூட அண்ணாமலைக்கு அபிஷேகம் நடந்ததாக குறிப்பிடப்படவில்லை.
தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆக வேண்டும் என்றோ, அதிமுக – பாஜக கூட்டணி முறிய வேண்டும் என்றோ அண்ணாமலை வழிபட்டார் என்று எந்த செய்தியும் இல்லை. மேலும், அண்ணாமலைக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டதாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
அண்ணாமலை போன்ற தோற்றம் கொண்ட ஒருவருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் நடந்ததை, அண்ணாமலைக்கு நடந்ததாகத் தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அதிமுக-வுடனான கூட்டணி முறித்து தான் முதலமைச்சராக வேண்டும் என்று மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்துகொண்ட அண்ணாமலை என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:‘நான் முதல்வராக வேண்டும்’ என்று மிளகாய் அபிஷேகம் செய்து கொண்டாரா அண்ணாமலை?
Fact Check By: Pankaj IyerResult: False
