
பிரதமர் மோடி நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று நோபல் பரிக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாக உண்மை அறியாமல் ஊடகங்கள் வதந்தி பரப்பியது தெரியவந்துள்ளது.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
தந்தி டிவி உள்பட அனைத்து ஊடகங்களும் பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளன. தந்தி டிவி வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில், “பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு? இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்குத் தகுதியானவர். அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாக மாறி வருகிறது. நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே கருத்து” என்று குறிப்பிட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
உண்மை அறிவோம்:
அமைதிக்கான நோபல் பரிசை பெற பிரதமர் மோடி தகுதியானவர் என்று நோபல் பரிசுக்குழுவின் துணைத் தலைவர் கூறியதாக ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்த செய்தியை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் ஆஷ்லே டோஜே ஏஎன்ஐ என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியை பகிர்ந்திருந்தனர். அதில், “நான் நோபல் கமிட்டியின் துணைத் தலைவர். நான் கூறியதாக ஒரு பொய் செய்தி பரவி வருகிறது. அப்படி எதையும் நான் கூறவில்லை” என்கிறார். பிரதமர் மோடி நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று அவர் கூறியதாக பரவும் தகவலைத்தான் அவர் மறுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர். சில ஊடகங்களும் இந்த செய்தி தவறானது என்று கட்டுரை வெளியிடடு வருகின்றன.
இந்தியா வந்துள்ள நோபல் பரிசு தேர்வுக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே பல இந்திய ஊடகங்களுக்கு தனித் தனியாக பேட்டி அளித்துள்ளார். இப்படி பேட்டி எடுத்த சில ஊடகங்கள் பிரதமர் மோடி நோபல் பரிசு பெறத் தகுதி வாய்ந்தவராக உள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளன.
ஏபிபி இந்தி ஊடகம் பேட்டி எடுத்துள்ளது. பேட்டியாளர் அவரிடம் பிரதமர் மோடி நோபல் பரிசு பெறுவார் என்று எப்படியாவது சொல்ல வைத்துவிட வேண்டும் என்பது போல மாற்றி மாற்றி கேள்வி கேட்கிறார். ஆனால், அதற்கு மோடி மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டுத் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற தகுதியுடையவர்களாக விளங்க அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என்று ஆஷ்லே டோஜே பொதுவாக பதில் அளித்திருந்தார்.
பிரதமர் மோடி நோபல் பரிசு பெற தகுதியானவர் என்றோ, அவர் மிகப்பெரிய போட்டியாளர் என்றோ தான் கூறவில்லை என்று ஆஷ்லே டோஜே விளக்கம் அளித்துவிட்டார். இதன் அடிப்படையில் பிரதமர் மோடி நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று நோபல் பரிசு தேர்வுக் குழு துணைத் தலைவர் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
