FactCheck: ஆஸ்திரேலிய அரசு 2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி அஞ்சல் தலை வெளியிட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு, சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவம்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி பகிர்வதை கண்டோம்.

Twitter Claim Link I Archived Link 

உண்மை அறிவோம்:
கனடா நாட்டில் ஏற்கனவே இதற்கான தீர்மானம் ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2016ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

The News Minute Link

இதேபோல, லண்டன் சட்டப்பேரவையிலும் இத்தகைய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tamil Guardian Link I London.gov.uk press release 

ஆனால், ஆஸ்திரேலியா அரசு சார்பாக இப்படியான தமிழ் மரபு மாதம் என்ற அறிவிப்போ, சிறப்பு அஞ்சல் தலையோ எதுவும் வெளியிடப்பட்டதாகச் செய்திகள் காணக் கிடைக்கவில்லை. Australia Post அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுபற்றி நீண்ட நேரம் தகவல் தேடியும் நமக்கு விவரம் எதுவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தை (044 4592 1300) தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசிய அதிகாரிகள், ‘’ஆஸ்திரேலியாவில் ஏராளமான தமிழர்கள் வசிப்பதால், அங்குள்ள சில தமிழ்ச் சங்கங்கள், நகர சபைகள், மாகாண சபைகள் போன்றவறை சார்பாக, இப்படியான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசு இத்தகைய அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை,’’ என்றனர்.

எனவே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகள் ஏதேனும் இப்படியான அஞ்சல் தலையை கட்டணம் செலுத்தி தயாரித்து வெளியிட்டிருக்கலாம்; இதனை ஆஸ்திரேலிய அரசே நேரடியாக வெளியிட்டது என அர்த்தப்படுத்தி, தகவல் பகிர்வது ஏற்புடையதல்ல என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

கூடுதல் ஆதாரத்திற்காக, ஆஸ்திரேலிய அஞ்சல் துறையை (Australia Post) இமெயில் மூலமாகத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இதனை பார்வையிட்ட அவர்கள், ”இது MyStamps என்ற இணையதளம் மூலமாக தனியார் பயன்பாட்டுக்கு, கட்டணத்தின் பேரில் தயாரித்து தரப்படுவதாகும். இது ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது கிடையாது. இதனை நாங்கள் விற்பனை செய்வதும் இல்லை. அலங்காரப் பொருள் போன்ற நோக்கில் இவ்வாறு தாங்கள் விரும்பும் அஞ்சல் தலைகளை MyStamps மூலமாக சமூக வலைதளங்களை உபயோகிப்பவர்கள் தயாரித்து வெளியிடுவது வழக்கமாக உள்ளது,” என்றனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஆஸ்திரேலிய அரசு 2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி அஞ்சல் தலை வெளியிட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading