
‘’பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை அடித்த இந்திய வீரர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ #கல்கத்தாவில்
#இந்தியா-வுக்கு எதிராக கூச்சலிட்டு பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை வெளுதெடுத்த எல்லையோர பாதுகாப்புப் படை வீரருக்கு ராயல் சல்யூட் ..!
#விழித்திடுஇந்துவே,” என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் பங்களாதேஷ் கொடி ஏந்தியபடி நிற்கும் ஒருவரை பாதுகாப்புப் படை சீருடை அணிந்த நபர் ஒருவர் விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகள் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இதற்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது. ஆம், குறிப்பிட்ட வீடியோ வங்கதேச தலைநகர் டாக்காவில் எடுக்கப்பட்ட ஒன்று…
கடந்த ஜூன் 10, 2025 அன்று வங்கதேசம் – சிங்கப்பூர் இடையே AFC Asian Cup 2027 கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவதற்கான போட்டி நடைபெற்றது. டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது, கொடி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரை தவறுதலாக, ராணுவ வீரர் கண்மூடித்தனமாக தாக்கினார்.
இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதற்காக மன்னிப்பு கோரிய வங்கதேச ராணுவம் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு அறிவித்தது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
News Link 1 l News Link 2 l News Link 3
எனவே, வங்கதேசத்தில் கால்பந்து போட்டியின்போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை எடுத்து, இந்தியாவில் வங்கதேச ஆதரவாளர் கொடி விற்றதாகவும், அவரை பாதுகாப்புப் படை வீரர் அடித்ததாகவும் குறிப்பிட்டு, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை அடித்த இந்திய வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
