
தி.மு.க அரசின் வேலை என்று குறிப்பிட்டு கை வைத்தாலே சிமெண்ட் உதிர்ந்து விழும் நிலையில் உள்ள பாலம் ஒன்றின் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive
பாலம் ஒன்றி பில்லர்கள் சிமெண்ட் ஜல்லி கலவை எல்லாம் கரைந்து வெறும் கம்பியின் பலத்தில் தாங்கி நிற்கும் அளவுக்கு மிக மோசமான நிலையில் இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அதில், “DMK Government work” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த 2024ம் ஆண்டு பீகாரில் பாலங்கள் பல இடிந்த விழுந்து கொண்டிருந்தது. அப்போது, பீகார் பாலங்களின் நிலை பற்றி அந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தனர். அதில், ஜல்லி-சிமெண்ட் கலவை தரமற்றதாக இருந்ததால் அவை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு வெறும் கம்பிகள் பலத்தில் பாலம் நிற்பதாக காட்டப்பட்டிருந்தது. அப்போது வைரலான வீடியோவை இப்போது இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது போன்று பதிவிட்டு வருகின்றனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இந்த பாலம் எங்கு உள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. எனவே, வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, Indian nix என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ வௌியாகி இருப்பதாக கூகுள் லென்ஸ் தளத்தில் நமக்கு தகவல் கிடைத்தது. ஆனால் வீடியோ கிடைக்கவில்லை.
எனவே, Indian nix ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருக்கும் நபர் பாலம் ஒன்றின் நிலை பற்றி நேரில் சென்று மக்களிடம் விசாரித்தது தொடர்பான வீடியோ கிடைத்தது. 2025 ஜனவரி 24ம் தேதி அந்த வீடியோவை பதிவேற்றியிருந்தனர். ஆனால், அந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள காட்சிகள் இல்லை. ஆனால் அந்த வீடியோவில் இது பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள குமார்சார் பாலத்தில் காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அந்த ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்த ரீல்ஸ் பகுதியில் நாம் தேடும் வீடியோ உள்ளதா என்று பார்த்தோம். தொடர்ந்து தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை அந்த ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், அந்த வீடியோ பீகாரைச் சார்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பாலத்தின் புகைப்படத்தை கூகுள் மேப்-ல் தேடிப் பார்த்தோம். அப்போது அந்த பாலம் மிகவும் சேதமடைந்து இருப்பதாகவும், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றும் தகவல் கிடைத்தது. மேலும் அந்த பாலத்தின் புகைப்படமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்த பாலத்தின் புகைப்படமும் ஒன்றாக இருந்தது. இவை எல்லாம் இந்த பாலம் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட பாலம் என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
பீகாரில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம் என்று சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவை எடுத்து தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டுள்ள பாலம் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:திமுக அரசு கட்டிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
