
பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து இதுதான் குந்தவையின் ஓவியம் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நையாண்டிக்குப் போடப்பட்ட பதிவை பலரும் உண்மையானது போலப் பகிர்ந்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பட்டுப் புடவை மற்றும் ஏராளமான நகை அணிந்த பெண்ணின் கருப்பு வெள்ளை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலேசிய நாட்டிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் சோழ இளவரசி குந்தவையின் ஒரே அரிய ஓவிய வரைப்படம்! ராஜராஜன் வழி வந்த சொந்தங்களே இதை அதிகம் ஷேர் செய்து நம் சோழர்களின் பெருமையை நிலைநாட்டுங்கள்.! 😂🤣😆😁 (பின்குறிப்பு:- குந்தவைத்து உட்கார்ந்து இருப்பதால் இவர் குந்தவை ஆவார்..!)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Esh R என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 6ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்ததிலிருந்து சோழர்கள் பெருமை பற்றிய பதிவுகள் சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், பொன்னியின் செல்வனில் இடம் பெற்ற குந்தவை கதாபாத்திரத்தை வைத்து நையாண்டிக்காகப் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மலேசியாவில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் உள்ள ஓவியம் என்று குறிப்பிட்டு பலரும் இந்த படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதை உண்மை என்று கருதி, சீரியசாக அதற்கு பதில் அளித்து வருகின்றனர். எனவே, இந்த பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.

இந்தியாவைப் போல மலேசியாவும் இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1957ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்றது. அப்படி இருக்கும் போது இங்கிலாந்து அரசின் அருங்காட்சியகம் மலேசியாவில் இருக்கத் தேவையில்லை. மிகப் பெரிய பொக்கிஷங்களை தங்கள் சொந்த நாட்டில் வைக்காமல் வேறு நாட்டில் வைக்க வேண்டிய தேவையும் இங்கிலாந்துக்கு இல்லை. மலேசிய நாட்டில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டது நையாண்டிக்காக என்று தெரிகிறது.
இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, oldindianphotos.in என்ற இந்தியாவின் பழங்கால புகைப்படங்கள் இருக்கும் இணையதளத்தில் இந்த படம் கிடைத்தது. அதில், இந்த புகைப்படம் 1872ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். பெண் ஒருவர் தங்க நகைகள் அணிந்திருக்கும் புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்தனர். Archaeological Survey of India-ன் புகைப்படத் தொகுப்பிலிருந்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மைப் பதிவைக் காண: bl.uk I Archive
ஆதாரம் British Library என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பிரிட்டிஷ் லைப்ரரி இணையதளத்தில் இந்த படத்தை தேடினோம். அந்த இணையதளத்தில் நமக்கு இந்த படம் கிடைத்தது.
இதன் மூலம் படத்திற்கும், சோழ இளவரசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், இந்த பதிவு நையாண்டிக்காக வெளியிட்டது என்றாலும் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மலேசிய அருங்காட்சியகத்தில் உள்ள குந்தவையின் ஓவியம் என்று நையாண்டிக்காக பகிரப்படும் புகைப்படம் 1872ம் ஆண்டு சென்னையில் எடுக்கப்பட்ட இளம் பெண் ஒருவரின் படம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மலேசிய அருங்காட்சியகத்தில் குந்தவை ஓவியம்?- நையாண்டிப் பதிவால் குழப்பம்!
Fact Check By: Chendur PandianResult: False
