பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் என தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி காத்துக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஒரு வீட்டின் மிகப்பெரிய இரும்பு கதவுக்கு முன்பாக திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அண்ணன் ஆர் எஸ் பாரதி எங்கடா?
இப்போது சந்திரபாபு நாயுடு மற்றும் நித்திஷ் குமார் வீட்டு வாசலில் காத்துட்டு இருக்கார்! உண்டி கூட்டணிக்கு வருவார்களான்னு!!!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியா கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களை இழுக்க அவர்கள் வீட்டு வாசலில் ஆர்.எஸ்.பாரதி காத்துக்கொண்டிருக்கிறார் என்று புகைப்படத்துடன் கூடிய பதிவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். கூட்டணிக் கட்சித் தலைவர்களை இழுக்க சரத்பவார் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக செய்தி வெளியானது. ஆனால், அதை சரத் பவார் மறுத்தார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது என்று இந்தியா கூட்டணி முடிவெடுத்துவிட்டது. இந்த நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை இழுக்க ஆர்.எஸ்.பாரதி முயற்சி செய்வது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுடன் கூட்டணி ஏற்படுத்த மேல் மட்ட அளவிலேயே தலைவர்கள் பேசிக்கொள்வார்கள். இப்படி வீட்டு வாசலில் அனுமதியின்றி சென்று காத்திருக்க வேண்டியது இல்லை. டெல்லி விமானநிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்தும் பேசியுள்ளார். இப்படி இருக்க எதற்காக ஆர்.எஸ்.பாரதி தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டுக்கு சென்றிருப்பார் என்ற கேள்வி எழவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
https://twitter.com/mkstalin/status/1798393528982372718
இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தை மின்னம்பலம் என்ற ஊடகம் 2023 ஜூனில் தங்கள் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருப்பதைக் காண முடிந்தது. அதில், "செந்தில் பாலாஜி இல்லத்திற்கு ஆர்.எஸ்.பாரதி வருகை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை செய்தபோது அங்கு ஆர்.எஸ்.பாரதி வந்தார் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் ஆர்.எஸ்.பாரதி நிற்கிறார் என்ற தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
உண்மைப் பதிவைக் காண: minnambalam.com I Archive
நம்முடைய ஆய்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் ஆர்.எஸ்.பாரதி நிற்பதாகப் பரவும் படம் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்தியா கூட்டணிக்கு இழுப்பதற்காக சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் ஆர்.எஸ்.பாரதி காத்துக்கொண்டிருக்கிறார் என்று பரவும் புகைப்படம் 2023ல் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வந்த போது எடுக்கப்பட்டது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False