
பீகாரில் பாஜக, நிதிஷ் குமாருக்கு எதிராக ராணுவ வீரர்கள் போராட்டத்தில் குதித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராணுவ வீரர்கள் பேரணியாகச் செல்வது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோ தெளிவாக இல்லை. நிலைத் தகவலில், “நாட்டுக்கு போராட வேண்டிய ராணுவ வீரர்கள் நாட்டுக்கு எதிராக போராடக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்😡😡
பீகாரில் பி..ஜே..பி நிதீஷ் குமார் ஆட்சிக்கு எதிராக ராணுவ வீரர்கள் போராட்டம் ✊✊
வாக்கு திருடர்களுக்கு எதிராக ராகுல் காந்தி பற்ற வைத்த நெருப்பு இந்தியா முழுவதும் பற்றி எரியட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வாக்குத் திருட்டு பற்றி ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பிய சூழலில், பீகாரில் பாஜக மற்றும் நிதிஷ் குமாருக்கு எதிராக ராணுவ வீரர்கள் போராட்டத்தில் குதித்தார்கள் என்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம் இந்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். ஆனால், ராணுவ உடையில் சிலர் போராட்டம் நடத்துகின்றனர். நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக பேசுகின்றனர். எனவே, இவர்கள் முன்னாள் ராணுவ வீரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பீகாரில் செயல்படும் “டயல் 112 அவசர கால சேவை” வாகன ஒட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்று சில பதிவுகள் நமக்குக் கிடைத்தன.
இந்த தகவல் அடிப்படையில் கூகுளில் தேடிய போது, இந்த போராட்டம் தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. தமிழ்நாட்டில் 108 சேவை இருப்பது போன்று பீகாரில் 112 என்ற ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவை ஆரம்பித்த போது மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பிறகு பெரிய அளவில் ஊதிய உயர்வு இல்லை. மூன்று ஆண்டுகளில் 750 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டுக்கு 10-15 கி.மீ சுற்றளவில் பணி நியமனம் வழங்கப்படும், ஆண்டுக்கு 20 நாள் விடுமுறை, வார விடுமுறை வழங்கப்படும் என்றெல்லாம் அறிவித்துவிட்டு எதையும் செய்யவில்லை என்று கூறி போராட்டம் நடத்தியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive I patnapress.com I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கூறியது போன்று ஓட்டுத் திருட்டைக் கண்டித்தோ, இந்திய அரசுக்கு எதிராகவோ, இந்திய நாட்டுக்கு எதிராகவோ இந்திய ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. பீகாரில் செயல்பட்டு வரும் 112 அவசரகால தொடர்பு துறையில் பணியாற்றி வரும் முன்னாள் ராணுவ வீரர்கள் நடத்திய போராட்டத்தின் வீடியோவை தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக டயல் 112 சேவையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தியதை வாக்குத் திருட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த இந்திய ராணுவம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:வாக்கு திருட்டுக்கு எதிராக ராணுவ வீரர்கள் போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
