தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடை பயணத்தில் பங்கேற்ற பெண்கள் மது அருந்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

காரில் பெண்கள் மது அருந்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் அவர்கள் பேசுவது எடிட் செய்யப்பட்டு, பாடல் ஒலிப்பது போல் மாற்றப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை.. பாஜக பெண்கள் குடித்தால் பொங்க மாட்டாளா கஸ்தூரி மாமி.... #ஆழ்ந்த_இரங்கல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை உண்மை கசக்கும் @Unmai_Kasakkum என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதை வைத்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்ற பெண்கள், காரில் அமர்ந்து மது அருந்துவதாக பலரும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வைரல் ஆனது. ஆந்திராவில் பெண்கள் மது அருந்துவதாக இந்த வீடியோ வைரல் ஆகியிருந்தது. எனவே, இந்த வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குத் தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

யூடியூபில் ஆந்திராவில் பெண்கள் காரில் மது அருந்தினர் என்பதை ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, 2021ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. உண்மையான ஆடியோவை கேட்கும் போது, அந்த பெண்கள் எல்லாம் தெலுங்கு மொழி பேசுவதைக் கேட்க முடிந்தது. இந்த வீடியோ தொடர்பாக வேறு தகவல் கிடைக்கிறதா என்று தேடிய போது, நமக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை.

இதே வீடியோவை 2021 மார்ச் மாதத்துக்குப் பிறகு பலரும் யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தனர். அதில் ஒரு வீடியோவில் மட்டும், தென்னிந்தியா, ஆந்திராவில் பெண்கள் மது அருந்தினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் வாரங்கல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வாரங்கல் தெலங்கானாவில் உள்ளது. மற்றபடி வேறு தகவல் அதில் குறிப்பிடப்படவில்லை. வெறும் தெலுங்கு மொழியில் அவர்கள் பேசுவதை மட்டும் வைத்துக்கொண்டு ஆந்திராவில் பெண்கள் மது அருந்தினர் என்று சில ஊடகங்களில் செய்தியும் வெளியாகி இருப்பதை காண முடிந்தது.

அண்ணாமலை தன்னுடைய நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் வைத்து 2023 ஜூலை மாதம் இறுதியில் தொடங்கினார். இந்த வீடியோவோ 2021ம் ஆண்டு மார்ச் மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்போது தமிழக பாஜக தலைவராகக் கூட அண்ணாமலை இல்லை. இதை அடிப்படையாக வைத்து, இந்த வீடியோ தவறான தகவல் சேர்த்துப் பரப்பப்பட்டுள்ளது என்று உறுதியாகிறது.

முடிவு:

அண்ணாமலை நடைபயணத்துக்கு பயன்படுத்தும் வாகனத்தில் எதற்கு இரட்டை படுக்கை என்று சீமான் கேட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலை நடைபயணத்தில் பெண்கள் மது அருந்தியதாக பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False