குழந்தையின் பசியைப் போக்க திருடிய தாயைக் கட்டி வைத்து அடித்ததாக ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மிக ஒல்லியான தேகம் கொண்ட ஒரு பெண் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தினுள் "இதைவிட கெகாடுமை வறுமை கொடுக்குமா. பிள்ளைகள் பசியை எந்த தாய்தான் பொறுத்துக்கொள்வாள் இது திருட்டல்ல இந்த மண்ணில பிறந்த பாவத்தின் கூலி" என்று தமிழில் டைப் செய்யப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "இது திருட்டல்ல இந்த மண்ணில் பிறந்த பாவத்தின் கூலி. எந்த தாயும் தன்குழந்தைகள் பசிக்குது என்றால் தாங்க மாட்டாள். இந்தத் தாய் குழந்தைகளுக்காக உணவை திருடியது தப்பா🥲😭😭" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு 2023 அக்டோபர் 19ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஏழ்மை காரணமாக குழந்தைகளின் பசியை போக்க உணவைத் திருடிய பெண்ணை மக்கள் தாக்கியது போன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த புகைப்படம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபேக்ட் செக் செய்திருந்த நினைவு இருந்ததால் இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்துடன் bhaskar.com என்ற இந்தி ஊடகம் 2019ம் ஆண்டு செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து படித்தோம். அதில், "ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் தன் வளர்ப்பு மகள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் கைகள் கட்டப்பட்டு அரை நிர்வாணம் ஆக்கித் தாக்கப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: bhaskar.com I Archive

கைகள் கட்டப்பட்டுத் தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் பெயர் மோஸ்மத் குஞ்சியா என்றும், அவரது வளர்ப்பு மகள் சுபாசோ குமாரி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சபோசோ குமாரியை மோஸ்மத் வளர்த்து வந்துள்ளார். சபோசோ குமாரிக்குத் திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், இது பற்றி வளர்ப்புத் தாயான மோஸ்மத்திடம் தெரிவிக்கவில்லை. திடீரென வந்து திருமணம் என்று கூறவே வளர்ப்புத் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபம் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் மோஸ்மத்தை அரை நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி தாக்கியுள்ளனர். இந்த பெண்ணின் ஆறு வயதே ஆன மகன் போலீஸ் நிலையத்துக்கு சென்று தன்னுடைய தாய் தாக்கப்படுவதாகக் கூறியுள்ளான். இதனால் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாக்கியவர்களைக் கைது செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் வெளியான செய்தியைத் தேடினோம். அப்போது, சாதி கொடுமை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டார் என்று இந்த புகைப்படத்துடன் 2020ம் ஆண்டு வதந்தி பரவிய போது அது தொடர்பாக ஃபேக்ட் செக் கட்டுரை வெளியிட்டிருந்தது தெரியவந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் பெண் உறவினர்களால் தாக்கப்பட்டார் என்பது தகுந்த ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வறுமை காரணமாகக் குழந்தையின் பசியைப் போக்கத் திருடிய பெண் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குடும்ப வன்முறை காரணமாக தாக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை, பசிக்கு உணவு திருடிய பெண் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குழந்தையின் பசியைப் போக்க உணவு திருடிய தாய் மீது தாக்குதலா?

Written By: Chendur Pandian

Result: False