FACT CHECK: மோடி ஆட்சி இருக்கும் வரை எங்களை கைது செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

மத்தியில் மோடி ஆட்சி இருக்கும் வரை திமுகவால் எங்களை ஊழல் வழக்கிலோ கொலை வழக்கிலோ கைது செய்ய முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “மத்தியில் மோடிஜி ஆட்சி இருக்கும்வரை திமுகவால் எங்களை ஊழல் வழக்கிலோ கொலை வழக்கிலோ கைது செய்யமுடியாது. – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் கீழ், “இந்த பெருமை எந்த நாட்டு பிரதமருக்கும் கிடைக்காது. இதிலிருந்து ஊழல், கொலை போன்றவற்றை மோடி ஆதரிக்கிறார் என்பது உறுதி” என்று தனியாக போட்டோஷாப் முறையில் டைப் செய்து இணைத்துள்ளனர்.

நிலைத் தகவலில் “அப்போது அவருக்கு தெரிந்து தான் நீங்க எல்லாம் செய்தீங்களா.?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Kumari Rajan Savier என்பவர் 2021 ஆகஸ்ட் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிகிறது. இதன் ஃபாண்ட் புதிய தலைமுறை பயன்படுத்துவது போல இல்லை. மேலும் பின்னணி வாட்டர் மார்க் லோகோவும் வித்தியாசமாக இருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இந்த நியூஸ் கார்டு, தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு மறுவிசாரணை தொடர்பாக அ.தி.மு.க நிர்வாகிகள் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, ஆளுநர் மாளிகை வாசலில் வைத்து எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அதன் அடிப்படையில் 2021, ஆகஸ்ட் 19ம் தேதி புதிய தலைமுறையில் நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. அன்றைய பேட்டியின் போது மோடி ஆட்சியில் இருக்கும் வரை எங்களை கைது செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. அன்றைய பேட்டியில் அவர் என்ன கூறினார் என்று பார்த்தோம். புதிய தலைமுறை, தந்தி டிவி என முன்னணி ஊடகங்கள் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பேட்டி தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. அவை எதிலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற கருத்தை அவர் கூறவில்லை.

அவருடைய முழு பேட்டியும் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். சில இணைய ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி அளித்த முழு பேட்டியும் வெளியாகி இருந்தது. அவற்றைப் பார்த்தபோது எங்கும் மோடி ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாடு அரசால் எங்களை கைது செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறவில்லை. இதன் மூலம் இந்த தகவல் தவறானது என்பது உறுதியானது.

அடுத்ததாக 2021 ஆகஸ்ட் 19ம் தேதி புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்று இருந்தது. அதில், “திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது; ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் இதைத்தான் திமுக செய்து வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து, முழு தகவலையும் மாற்றி தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது. இதை மேலும் உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவை தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் இது போலியானது என்று உறுதிப்படுத்தினர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதன் மூலம் மோடி ஆட்சி இருக்கும் வரை திமுக-வால் எங்களை ஊழல், கொலை வழக்கில் கைது செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மோடி ஆட்சியில் இருக்கும் வரை எங்களை கைது செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடி ஆட்சி இருக்கும் வரை எங்களை கைது செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False