FACT CHECK: ஆப்கானிஸ்தானில் பெண் விமானியை தாலிபான்கள் கொலை செய்தார்களா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

ஆப்கானிஸ்தான் விமானப்படை பெண் விமானியை தாலிபான்கள் கல்லால் அடித்து கொலை செய்தார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆப்கான் விமானப்படையின் பெண் விமானி சஃபியா ஃபிரோஸி. தாலி பன்களால் கல்லால் அடித்து கொலை.. அவ்வளவு தான் அவிங்க புத்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Mohanraj T என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 19ம் தேதி இதை வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் தாலிபான்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. தற்போதைய உண்மை செய்தியுடன் பழைய நிகழ்வுகள், ஆப்கானிஸ்தானுடன் தொடர்பில்லாத பல செய்திகள் ஆப்கானிஸ்தானில் நடந்ததாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விமானப் படை விமானி சஃபியா ஃபிரோஸியை தாலிபான்கள் கல்லால் அடித்து கொலை செய்தார்கள் என்று ஒரு படத்துடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படவே அது உண்மையா என ஆய்வு செய்தோம்.

ஆப்கானிஸ்தானில் சஃபியா ஃபிரோஸி என்று விமானப்படை பெண் விமானி யாராவது உள்ளார்களா என்று பார்த்தோம். அப்போது அந்த பெயரில் விமானப்படை பெண் விமானி ஒருவர் இருப்பது தெரிந்தது. ஆனால், அவர் கொலை செய்யப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: nytimes.com I Archive 1 I aljazeera.com I Archive 2 I bbc.com I Archive 3

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது படத்தில் இருப்பது 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குரானை எரித்துவிட்டார் என்ற வதந்தி காரணமாக கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட இளம் பெண் ஃபர்குண்டா மாலிக்ஸடா என்பது தெரியவந்தது.

மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஃபர்குண்டா கொலை தொடர்பான பல செய்திகள், அவருக்கு நீதி வேண்டி நடந்த போராட்டம் தொடர்பான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. கொஞ்சம் கூட இரக்கம் இன்றி அந்த இளம் பெண்ணை கொலை செய்த வீடியோ காட்சிகளும் நமக்கு கிடைத்தன. 

மேலும், தாலிபான்கள் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் காபூலை கைப்பற்றினர். அதற்கு முன்பாக 2015ம் ஆண்டில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதி செய்திருப்பதன் மூலம் தாலிபான்கள் கல்லால் அடித்து இளம் பெண்ணை கொலை செய்தார்கள் என்ற தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

ஆப்கானிஸ்தானின் விமானப்படை பெண் விமானியை தாலிபான்கள் கல் எறிந்து கொலை செய்தார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆப்கானிஸ்தானில் பெண் விமானியை தாலிபான்கள் கொலை செய்தார்களா?

Fact Check By: Chendur Pandian 

Result: False