இரக்கத்தை உண்டாக்கிய ஃபேஸ்புக் பதிவு; ஷேர் செய்தால் ரூ.8 கிடைக்குமா?

சமூக ஊடகம் | Social சமூகம்

சிறுமி ஒருவரின் அறுவைசிகிச்சைக்கு ரூ.8 லட்சம் தேவைப்படுவதாகவும், இந்த பதிவை ஷேர் செய்தால் ரூ.8 கிடைக்கும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

FB 2.png
Facebook LinkArchived Link

தரையில் படுத்திருக்கும் சிறுமி, அருகில் பெற்றோர் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் யார், எந்த ஊர், சிறுமிக்கு என்ன பிரச்னை என்று எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை. 

நிலைத் தகவலில், “8 லட்சம் வேண்டும், ஆப்ரேஷன் செய்ய வேண்டும். ஒரு மெசேஜ் அனுப்பினால் ரூ.8 கிடைக்கும். தயவு செய்து ஷேர் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

கடலை மன்னன் என்ற ஃபேஸ்புக் ஐ.டி-யில் இருந்து 2018 மார்ச் 21ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதை கிட்டத்தட்ட 3.96 லட்சம் பேர் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

படத்தில் உள்ளவர்கள் யார், எந்த ஊரைச் சார்ந்தவர்கள், சிறுமிக்கு என்ன பிரச்னை என்று குறிப்பிடவில்லை. இந்த பதிவை ஷேர் செய்தால் சிறுமிக்கு எப்படி உதவி கிடைக்கும் என்று குறிப்பிடவில்லை. ஷேர் செய்வதால் யார் அந்த சிறுமிக்கு 8 ரூபாய் கொடுப்பார்கள் என்று குறிப்பிடவில்லை. ஷேர் செய்தால் அந்த உதவி கடலை மன்னன் என்ற ஃபேஸ்புக் ஐடி நபருக்குக் கிடைக்குமா, அதை அவர் சிறுமிக்கு வழங்குவாரா, அல்லது நேரடியாக சிறுமிக்குக் கிடைக்குமா என்று குறிப்பிடவில்லை. சிறுமியின் பரிதாப நிலையைக் கண்டு, அவருக்கு உதவி கிடைத்தால் போதும் என்ற நல்ல எண்ணத்தில் ஒரு ஷேர் தானே என்று கிட்டத்தட்ட நான்கு லட்சம் பேர் ஷேர் செய்திருக்கிறார்கள்.இந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றம் செய்து தேடினோம். அப்போது, பல ஆண்டுகளாக இந்த படம் பல மொழிகளில் பரவி வருவது தெரிந்தது. இவர்கள் யார், சிறுமி இப்போது எப்படி இருக்கிறார் என்று கண்டறிய முடியவில்லை.

FB 3.png

ஃபேஸ்புக்கில் இப்படி நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன என்று தகவல் பரவிக்கொண்டேதான் இருக்கின்றன. இப்படி ஷேர் செய்தால், லைக் செய்தால் அவர்களுக்கு ஃபேஸ்புக் உதவி செய்யுமா என்று தேடினோம். “லைக்ஸ் மற்றும் ஷேருக்கு ஃபேஸ்புக் நிதி உதவி செய்யுமா” என்று டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது, சில செய்திகள், ஃபேஸ்புக் பதிவுகள் நமக்கு கிடைத்தன. அவற்றைப் படித்துப் பார்த்தோம்.

பகிரப்படும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ், ஷேர் அளவைப் பொறுத்து ஃபேஸ்புக் நிதி உதவி அளிப்பது இல்லை. காயம் அடைந்த, உடல் நலம் பாதிப்படைந்த குழந்தைகள் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்படுகிறது. அப்படிப்பட்ட புகைப்படங்களைப் பகிர வேண்டாம். ஒருவேளை, புகைப்படத்தில் உள்ளவர்கள் பற்றிய தகவல், உதவி செய்யும் வழி எல்லாம் குறிப்பிட்டிருந்தால் நல்ல உள்ளம் கொண்டவர்கள் யாராவது உதவுவார்கள். அதைப் பற்றி பிரச்னை இல்லை. ஆனால், எந்த தகவலும் இல்லாமல், ஃபேஸ்புக் உதவி செய்யும் என்று பகிரப்படும் பதிவுகளை பகிர வேண்டாம். அந்த பதிவு பற்றி ஃபேஸ்புக்கில் புகார் அளிப்பது நல்லது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Article LinkArchived Link

மற்றொரு பதிவில், ஃபேஸ்புக் பதிவு வழியாக நிதி உதவி செய்யும் வசதி இல்லை. நீங்கள் உதவி செய்ய விரும்பினால் அருகில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு செய்யுங்கள்… ஷேர் செய்து வீணாக வதந்தியை பரப்பாதீர்கள் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும், இது போன்ற பதிவுகளைப் பரப்புகிறவர்களுக்கு உண்மையில் கருணை உள்ளம் எல்லாம் இல்லை. தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை பிரபலப்படுத்தவே இதுபோன்ற பதிவுகளை அவர்கள் வெளியிடுகின்றனர். காணாமல் போன குழந்தை, நோயில் அவதியுறும் குழந்தைக்கு உதவுகிறோம் என்ற நல்ல எண்ணத்தில் பலரும் இந்த பக்கங்களுக்கு லைக்ஸ் கொடுக்கின்றனர். ஃபேஸ்புக் மாத்திரமல்ல… ட்வட்டர், கூகுள், யூடியூப் என எந்த ஒரு நிறுவனமும் இப்படி ஷேர் செய்வதால் நிதி உதவி வழங்குவது இல்லை என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Article LinkArchived Link

ஃபேஸ்புக் இது தொடர்பாக ஏதும் விளக்கம் அளித்துள்ளதா என்று தேடினோம். அப்போது அதன் உதவி பக்கத்தில் கேள்வி பதில் ஒன்று கிடைத்தது. அதில், அதில், லைக், ஷேர் செய்வதால் யாருக்கும் பணம் கொடுப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இப்படி லைக், ஷேர் செய்யச் சொல்வதை ஃபேஸ்புக் நிறுவனம் “Like Farming” என்று சொல்கிறது. இப்படி லைக், ஷேர் செய்வதன் மூலம் நமக்குத் தெரியாமலேயே பொய்யான தகவலை நாம் பரப்புகிறோம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், இப்படி அந்த பக்கத்துக்கு அதிக லைக்ஸ் வாங்கிவிட்டு, அதைக் காட்டியே வேறு யாருக்காவது அந்த பக்கத்தை விற்பனை செய்துவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். 

Facebook LinkArchived Link

நமக்கு கிடைத்த இந்த தகவல் அடிப்படையில், மக்களின் இரக்க சிந்தனையைப் பயன்படுத்தி தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை பிரபலப்படுத்த, லைக்ஸ் வாங்க இது போன்ற தகவல் பகிரப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்காது என்பதாலும், ஷேர் செய்தால் எட்டு ரூபாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளதாலும் இது தவறான பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இரக்கத்தை உண்டாக்கிய ஃபேஸ்புக் பதிவு; ஷேர் செய்தால் ரூ.8 கிடைக்குமா?

Fact Check By: Chendur Pandian 

Result: False