
ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி தலைவன் கள்ள நோட்டு அச்சடித்தது பற்றி மும்பையில் விசாரணை நடந்து வருகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
ஏ.பி.வி.பி மற்றும் தாமரை சின்னம் மற்றும் கட்டுக்கட்டாக 2000ம் ரூபாய் நோட்டுக்களை பார்வையிடும் போலீசார் படம் என பலவற்றை ஒன்று சேர்த்து கொலாஜ் வடிவில் பதிவிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “அகில இந்திய ஏ.பி.வி.பி தலைவன் தலைமையில் போலி கள்ள நோட்டு அச்சு அடித்ததாக மும்பையில் விசாரணை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, மனுஷனாடா நீ யோசி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜனவரி 14ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த படத்தில் உள்ள காவலர்களைப் பார்த்தால் மும்பை போலீஸ் போல தெரியவில்லை. மகாராஷ்டிரா போலீசின் சின்னம் நட்சத்திரத்துடன் இருக்கும். ஆனால், இதில் இரண்டு இறகுகளுக்குள் ஏதோ எழுதப்பட்டு இருந்தது. இதனால், இந்த பதிவு பற்றிய ஆய்வை மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, ஆந்திர ஜோதி என்ற தெலுங்கு பத்திரிகையில் இந்த படம் மற்றும் செய்தி 2019 நவம்பர் 2ம் தேதி வெளியான விவரம் நமக்கு கிடைத்தது. தெலுங்கில் இருந்த அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது, தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கள்ள நோட்டு கட்டுக்கட்டாக பிடிபட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

Search Link | andhrajyothy.com | Archived Link |
கம்மம், கள்ள நோட்டு என்ற கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம்.அப்போது தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்ற செய்தி நமக்கு கிடைத்தது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள போலீஸ் அதிகாரிகள், கத்தைக் கத்தையாகப் பிடிபட்ட கள்ள நோட்டுக்கள் படம் இருந்தது. ஆனால் இந்த செய்திகளில் கைது செய்யப்பட்ட நபர்கள் பற்றிய தகவல் இல்லை.

timesofindia.indiatimes.com | Archived Link 1 |
business-standard.com | Archived Link 2 |
telanganatoday.com | Archived Link 3 |
தொடர்ந்து தேடியபோது ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. அதில், ஷேக் மதார் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்” என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் பின்னணி பற்றி எந்த தகவலும் இல்லை. அதன் பிறகு 10 நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. அதிலும் கூட ஷேக் பெயரை மட்டுமே போலீசார் தெரிவித்திருந்தனர். வேறு எதையும் அவர்கள் கூறவில்லை.
aninews.in | Archived Link 1 |
siasat.com | Archived Link 2 |
நம்முடைய ஆய்வில்,
படத்தில் உள்ள சம்பவம் மும்பையில் நடைபெறவில்லை தெலங்கானா மாநிலம் கம்மம் நகரில் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கள்ள நோட்டு அச்சடித்ததாக ஏ.பி.வி.பி நிர்வாகி கைது செய்யப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்டது தொடர்பாக ஷேக் மதார் என்பவர் கைது செய்யப்பட்ட விவரம் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் ஏ.பி.வி.பி தலைவர் கள்ள நோட்டு அடித்ததாக மும்பையில் கைது செய்யப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஏ.பி.வி.பி தலைவன் மும்பையில் கள்ள நோட்டு அடித்ததாக பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
