
‘’இந்தியா முழுவதும் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் உள்ள வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. ஆதாரத்திற்கு, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டையும் சேர்த்து பகிர்ந்துள்ளதால், இந்த பதிவில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Hemanathan Murugesan என்பவர் திமுக இணையதள அணி என்ற ஃபேஸ்புக் குழுவில் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தந்தி டிவி வெளியிட்ட செய்தி விவரமும் இடம்பெற்றுள்ளது. இதனை பகிர்ந்தவர் திமுக ஆதரவாளர் என்பதால், இப்பதிவு, அரசியல் நோக்கங்களுக்காக பதிவிடப்பட்டதாக, தெரியவருகிறது.
உண்மை அறிவோம்:
தந்தி டிவி இத்தகைய செய்தியை முதலில் வெளியிட்டுள்ளதா, என இணையத்தில் தேடிப் பார்த்தோம். அப்போது, ஏப்ரல் 15ம் தேதி இதுதொடர்பாக, தந்தி டிவி வெளியிட்ட சிறப்பு செய்தியின் வீடியோ ஆதாரம் கிடைத்தது.

குறிப்பிட்ட வீடியோவை பார்வையிட்டபோது, அதில், குற்றப் பின்னணி உள்ள எம்பி வேட்பாளர்கள் மற்றும் கோடீஸ்வர எம்பி வேட்பாளர்கள் பற்றி விரிவாக செய்தி வெளியிடப்பட்டதாக, தெரியவருகிறது.
இந்த வீடியோவின் 4.44வது நிமிடத்தில், நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ளதுபோலவே, அன்புமணி ராமதாஸ் மீது 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தந்திடிவி சொல்லிவிட்டதாலேயே அது உண்மை என்றாகி விட முடியாது. காரணம், இதுதொடர்பாக, நாம் கூகுளில் தேடியபோது, தி இந்து வெளியிட்ட ஒரு செய்தி விவரம் கிடைத்தது. அதில், அன்புமணி ராமதாஸை விடவும், அதிக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளர் ஒருவர் உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆம். அன்புமணி 12 வழக்குகளை மட்டுமே சந்தித்து வருகிறார். அவரை விட அதிகமாக, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆர்.ஈஸ்வரன் 14 வழக்குகளை சந்தித்து வருவதாக, தமிழக தேர்தல் கண்காணிப்பு அதிகாரியே தெரிவித்துள்ளதாக, தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதைவிட வேறு பெரிய ஆதாரம் தேவையில்லை. தி இந்துவின் செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர, அன்புமணியே தன்மீது 12 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, தனது வேட்புமனுவில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தி ஆதாரம் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எப்படி பார்த்தாலும், குற்ற வழக்குகளின் அடிப்படையில் தமிழக அளவிலேயே அன்புமணி 2வது இடத்தில்தான் உள்ளார். இதில், அவரை இந்திய அளவில் முதலிடம் என்று சொல்வது மிகத் தவறு. எனவே, இந்த பதிவில் பகிரப்பட்ட தந்தி டிவியின் செய்தி மட்டுமே உண்மை. அதேசமயம், அன்புமணியை இந்தியாவிலேயே அதிக குற்ற வழக்குகள் உள்ள நபர் எனக் கூறியுள்ளது, தவறான தகவல். இந்த பதிவில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:அன்புமணி ராமதாஸ் மீது 12 குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுவது உண்மையா?
Fact Check By: Parthiban SResult: Mixture
