
‘’புத்தரை தீயசக்தி என்ற கிறிஸ்தவ மதபோதகர்; அவரை ஓங்கி அறைந்த துறவி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Video Link |
Venkataraman Sitaraman என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் புத்த மதத்துறவியும், கிறிஸ்தவ மதபோதகர் போன்ற ஒருவரும் சிங்களத்தில் கார சாரமாக விவாதித்துக் கொள்கின்றனர். திடீரென பேசிக் கொண்டிருக்கும்போது, அவரை புத்த துறவி ஓங்கி அறைகிறார். இந்த வீடியோவை நமது இலங்கை பிரிவில் பணிபுரியும் நண்பருக்கு (Fact Crescendo Sri Lanka) அனுப்பி விவரம் கேட்டோம்.
அதனை பார்வையிட்ட அவர், சம்பந்தப்பட்ட புத்த மத துறவியின் பெயர் Ampitiye sumanarathana himi என்றும், இது இலங்கையின் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘’குறிப்பிட்ட கிறிஸ்தவ நபர் அப்பகுதியில் கிறிஸ்தவ மத பரப்புரை செய்தபோது, அவரை புத்த துறவி வழிமறித்துள்ளார். அப்போது, அவரிடம் இறந்தபின் ஒரு புத்த மதத்தினர் எங்கே செல்வீர்கள் என்று கிறிஸ்தவ போதனையாளர் கேட்க, இதனால் ஆத்திரம் அடைந்த புத்த மத துறவி அவரை ஓங்கி அறைகிறார்,’’ என்றும் நமது இலங்கை நண்பர் மொழி பெயர்த்து கூறினார். நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் ஒரு பகுதி வீடியோ மட்டுமே இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவின் முழு லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
மேலே உள்ள வீடியோவில், புத்த துறவி கிறிஸ்தவ போதனையாளரை அடிப்பதும், உடனே அங்கு போலீஸ் வந்து விசாரிப்பதையும் காண முடிகிறது.
இதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட மட்டக்களப்பு பகுதியில் கட்டாய மதமாற்றம் மற்றும் தெருவோரங்களில் கிறிஸ்தவ மதபோதனைகள் நடப்பதாகவும் கூறி, புத்த துறவி அம்பிடியே அடிக்கடி பலரிடம் வாக்குவாதம் செய்வது வாடிக்கையான ஒன்றுதான் எனவும் நண்பர் கூறினார். அவர் தொடர்பான மேலும் ஒரு வீடியோ காட்சியை கீழே இணைத்துள்ளோம்.
இதேபோல, அந்த புத்த துறவி தொடர்பான மற்றொரு சர்ச்சையான வீடியோ காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) இறந்தபின் புத்த மதத்தினர் எங்கே செல்வீர்கள் எனக் கேட்ட கிறிஸ்தவ போதனையாளரை புத்த துறவி தாக்கியுள்ளார்.
2) எந்த இடத்திலும் புத்தர் ஒரு தீய சக்தி என்றோ, இயேசுதான் உண்மையான கடவுள் என்றோ அந்த கிறிஸ்தவ போதனையாளர் குறிப்பிடவில்லை. சிங்கள மொழியில் பேசும் வீடியோவை முழுதாக பார்க்காமல் ஒரு பகுதியை பார்த்துவிட்டு, தவறான தகவலை நாம் ஆய்வு செய்யும் பதிவில் பகிர்ந்துள்ளனர்.
3) சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ள புத்த துறவி, கிறிஸ்தவ மத போதகர்களையோ அல்லது பாதிரியார்களையோ பார்த்தால் வழிமறித்து வாக்குவாதம் செய்வது மட்டக்களப்பு பகுதியில் வழக்கமாக நடக்கும் நிகழ்வாகும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:புத்தரை தீயசக்தி என்ற கிறிஸ்தவ மதபோதகர்; ஓங்கி அறைந்த துறவி: வைரல் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
