நமாஸ் செய்ய இடையூறாக இருந்தது என்று கூறி மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் ரயில் நிலையத்தைத் தகர்த்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கலவரக்காரர்கள் ரயில் நிலையத்தை அடித்து உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ரயில் விசில் சத்தம் அவர்களின் முஸ்லிம்கள் நமாஸ் ஓத இடையூறாக இருக்கிறது என்று கூறி மேற்கு வங்காளத்தில் உள்ள *முர்ஷிதாபாத் ரயில் நிலையம்* அழிக்கப்பட்டது. கொடூர செயல் தாங்கள் யார் என்பதைக் காட்டுகிறது..

இந்தியாவின் எதிர்காலத்தை நம்மால் பார்க்க முடிகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாலமுருகன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஏப்ரல் 30ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை வீடியோக்களை எல்லாம் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடையாக இருந்ததாகக் கூறி வன்முறையில் ஈடுபட்டனர் என்று தவறான தகவல் சேர்த்து புதிதாக நடந்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ரயில் தண்டவாளத்தை இஸ்லாமியர்கள் தகர்த்ததாக சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டனர். நமாஸ் செய்யும் போது ரயில் சத்தம் இடையூறாக இருந்ததால் இஸ்லாமியர்கள் தண்டவாளத்தைப் பெயர்த்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். அது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது, நமாஸ் செய்யும் போது ரயில் விசில் சத்தம் இடையூறாக இருந்தது என்று ரயில் நிலையத்தையே தகர்த்தனர் என்று மற்றொரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியைப் பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோவைப் பார்த்த போது அதில் ரயில் நிலையத்தின் பெயர் Naopara Mahishasur என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பதிவிட்டவரோ தாக்குதலுக்குள்ளான ரயில் நிலையத்தின் பெயர் முர்ஷிதாபாத் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் கூகுள், ஃபேஸ்புக்கில் தேடிய போது 2019ம் ஆண்டு சிஏஏ போராட்டத்தின் போது மேற்கு வங்கத்தில் ரயில் நிலையம் தாக்கப்பட்டதாக சில வீடியோக்கள் கிடைத்தன. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் இருந்தது.

தொடர்ந்து தேடிய போது மேற்கு வங்கத்தில் சிஏஏ போராட்டத்தின் போது Naopara Mahishasur ரயில் நிலையம் தாக்கப்பட்டதாக வங்க மொழியில் வெளியான வீடியோக்கள், செய்திகள் நமக்குக் கிடைத்தன. சமீபத்தில் நமாஸ் செய்ய தடையாக இருப்பதாக கூறி மேற்கு வங்கத்தில் ஏதேனும் ரயில் நிலையம் சூறையாடப்பட்டதா என கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வங்கப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

அப்போது அவர்கள், அப்படி எந்த ஒரு சம்பவமும் சமீபத்தில் நடக்கவில்லை. 2019ம் ஆண்டு நிகழ்ந்த சிஏஏ வன்முறை வீடியோவை இப்போது நிகழ்ந்தது போன்று சிலர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ரயில் நிலையம் எதுவும் தாக்கப்பட்டதா என ஜாங்கிபூர் மாவட்ட காவல் துறையைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று உறுதி செய்துள்ளனர் என தெரிவித்தனர்.

உண்மைப் பதிவைக் காண: bartamanpatrika.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2019ம் ஆண்டில் சிஏஏ போராட்டத்தின் போது என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. மேற்கு வங்கத்தில் நமாஸ் செய்ய இடையூறாக இருந்தது என்று சமீபத்தில் ரயில் நிலையம் எதுவும் தாக்கப்படவில்லை. இதன் அடிப்படையில் நமாஸ் செய்ய இடையூறாக இருந்தது என்று மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் ரயில் நிலையத்தை இஸ்லாமியர்கள் தகர்த்தனர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேற்கு வங்கத்தில் நமாஸ் செய்ய இடையூறாக இருந்தது என்று ரயில் நிலையத்தை தகர்த்த இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:Rapid Fact Check: வழிபாட்டுக்கு இடையூறாக இருந்ததால் ரயில் நிலையத்தை இஸ்லாமியர்கள் தாக்கினரா?

Fact Check By: Chendur Pandian

Result: False