விஜய்க்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு பற்றி சமயம் தமிழ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

சினிமா | Cinema தமிழகம்

‘’ரெய்டில் ரூ.65 கோடி பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் சமயம் தமிழ் இணையதளம் வெளியிட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 1Samayam Tamil LinkArchived Link 2

உண்மை அறிவோம்:
மேற்கண்ட சமயம் தமிழ் ஃபேஸ்புக் பதிவில் ‘’ரூ.65 கோடி பறிமுதல்: விஜய்யை பிடித்து விசாரிக்க காரணம் தெரிஞ்சிடுச்சு,’’ என்ற தலைப்பையும், அதே அவர்களின் இணையதள செய்தியில், ‘’ரெய்டில் ரூ. 77 கோடி பறிமுதல்: விஜய்யை பிடித்து விசாரிக்க காரணம் தெரிஞ்சிடுச்சு,‘’ என்ற தலைப்பையும் பார்க்க முடிகிறது. இதுவே நமக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

இதன்படி, மேற்கண்ட செய்தியின் தலைப்பு மற்றும் ஃபேஸ்புக் பதிவின் தலைப்பு வெவ்வேறாக உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் மதிப்பு எவ்வளவு என தெளிவாகக் குறிப்பிடவில்லை. அத்துடன், இதனை பார்த்தால் யாரிடம் இருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது பற்றிய குழப்பமும் வருகிறது. தலைப்பை பார்த்ததும், விஜயிடம் இருந்து இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது போன்ற எண்ணமும் தோன்றுகிறது.

இதே செய்தியை மற்ற ஊடகங்கள் எப்படி வெளியிட்டுள்ளன என்பது பற்றிய ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

News18 Link NDTV News HindustanTimesTheHindu LinkTheNewsMinute

இதுதவிர, வருமான வரித்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையை தேடிப் படித்து பார்த்தோம். அதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. 

Pib.gov.in LinkArchived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம் பின்வருமாறு:-

1) சமயம் தமிழ் ஃபேஸ்புக் பதிவில் ரூ.65 கோடி ரெய்டில் சிக்கியது எனக் கூறிய தகவல் தவறானது. அத்துடன், அவர்களின் இணையதள செய்தியின் தலைப்பில் ரூ.77 கோடி பறிமுதல் எனக் குறிப்பிட்டுள்ளது மேலும் குழப்பத்தை அதிகரிக்கிறது.

2) செய்தியின் தலைப்பை படிக்கையில், நடிகர் விஜயிடம் இருந்து இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டதுபோல தோன்றுகிறது. ஆனால், செய்தியின் உள்ளே, விஜய் நடித்த சமீபத்திய படம் ஒன்றின் பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர். 

3) இதுபற்றி வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ செய்தியறிக்கை நமக்கு கிடைத்துள்ளது. அதில், ‘’தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் அவர் நடித்து சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படத்தின் தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர், விநியோகஸ்தர் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினோம். அவர்கள் சேர்ந்து வெளியிட்ட படத்தின் வசூல் ரூ.300 கோடியை கடந்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நடித்ததற்காக, குறிப்பிட்ட நடிகர் வாங்கிய சம்பளம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதுவரையிலும் அந்த நடிகரிடம் இருந்து எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதேசமயம், அந்த படத்தின் பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடியை பறிமுதல் செய்துள்ளோம்,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் செய்தியின் தலைப்பு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:விஜய்க்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு பற்றி சமயம் தமிழ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline