
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயிரக் கணக்கான தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
லாரியில் கொல்லப்பட்ட ஏராளமான நாய்கள் உள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தெரு நாய்களைக் கொன்று குவிக்கும் குஜராத் அரசு😢😢😢 இதற்கு எந்த பீட்டாவும் (PETA) குரல் கொடுக்காதது ஏன்?
சீனப் பிரதமர் மகாபலிபுரம் -சென்னை வந்தப்ப தெரியாத்தனமா ஒரு நாய் உள்ள புகுந்ததற்காடா இத்தனை களேபரங்கள்???” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Kishore Khanmk என்பவர் 2020 பிப்ரவரி 19 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 24ம் தேதி இந்தியா வருகிறார். இதையொட்டி பல உண்மை தகவலுடன் வதந்திகளும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டிரம்ப் வருகைக்காக ஆயிரக் கணக்கான தெரு நாய்கள் கொல்லப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
அகமதாபாத்தில் நாய்கள் கொல்லப்படுவதாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடியபோது, டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், டிரம்ப் பயணம் மேற்கொள்ளும் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களை பிடித்து வேறு பகுதியில் விட்டுவருவதாக, குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கையில் கால்நடை பராமரிப்புத் துறை, வனத்துறை, நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். டிரம்ப் பயணம் மேற்கொள்ளும் சாலையில் இருந்து 2.75 கி.மீ சுற்றளவுக்கு சாலையில் திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களில் விடப்படுவதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.

timesofindia.indiatimes.com | Archived Link | Search Link |
இதன் மூலம் குஜராத்தில் ஆயிரக் கணக்கான நாய்கள் கொல்லப்படுகிறது என்று வெளியான தகவல் தவறானது என்பது உறுதியானது. இந்த புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதா என்று அறிய, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, தெலங்கானாவில் மாநகராட்சி நிர்வாகம் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து கொன்றதாக வெளியான செய்தி கிடைத்தது.

Search Link | indiatimes.com | Archived Link |
இந்தியா டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் Donita Jose என்பவர் வெளியிட்ட வீடியோ கிடைத்தது. 2019ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி அந்த பதிவை அவர் வெளியிட்டிருந்தார். தெலங்கானாவில் எல்லா மாநகராட்சி, நகராட்சிகளிலும் இதுதான் நிலை என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவின் 26வது விநாடியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்பட காட்சி வருவதைக் காண முடிந்தது.
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
அகமதாபாத்தில் நாய்கள் மற்றும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களில் விடப்படும் செய்தி கிடைத்துள்ளது.
ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:டிரம்ப் வருவதால் தெரு நாய்கள் கொல்லப்பட்டதா?- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
