காமராஜருக்குப் பின் முதல்வர் பதவி வகிக்கும் தமிழர் எடப்பாடி பழனிசாமி: ஃபேஸ்புக் வதந்தி
‘’காமராஜருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தமிழர் முதல்வர் என்ற பெருமையை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link
Tamizh Pasanga.com என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், காமராஜர் மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி, காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு தமிழர் முதல்வர் க.பழனிச்சாமி பெருமையாக இருக்கிறது,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல, தமிழகத்தில் முதல்வரான முதல் தமிழர் காமராஜர் என்ற தகவலே தவறாகும். ஆம். அதாவது, இந்திய சுதந்திரத்திற்குப் பின், மொழிவாரி மாநில பிரிவினைகள் ஏற்பட தொடங்கிய 1950ம் ஆண்டு முதல் தமிழகத்தின் (மதராஸ் மாகாணம்) முதல்வராக இருந்தவர்களின் விவரத்தை மட்டும் சேகரித்தோம்.
அதில், காமராஜர் முதல்வர் பதவிக்கு வரும் முன்பாகவே, பிஎஸ் குமார சாமி ராஜா, ராஜாஜி ஆகியோர் பதவி வகித்திருக்கிறார்கள். அவர்களில் குமாரசாமி ராஜா ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். அதேசமயம், ராஜாஜி தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான்.
இருந்தாலும், ராஜாஜியை பார்ப்பனர் என்று கூறி பலரும் தமிழராக ஏற்க மறுக்கிறார்கள். சரி, அது அவரவர் விருப்பம். அடுத்தப்படியாக, இவர்கள் சொன்னது போல, காமராஜருக்கு அடுத்தப்படியாக வேறு எந்த தமிழ் ஜாதியினரும் முதல்வராக வரவில்லையா என தகவல் தேடினோம். அப்போது, பக்தவச்சலம், அண்ணாதுரை, வி.ஆர்.நெடுஞ்செழியன் (இடைக்கால முதல்வர்), ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் தமிழ் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் என்ற விவரம் கிடைத்தது.
1950க்குப் பின் முதல்வர் பதவிக்கு வந்தவர்களில், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாதி பற்றியும், தாய்மொழி பற்றியும் இருவேறான கருத்துகள் உள்ளதால், நாம் அதை தவிர்த்துவிட்டு, இந்த சில தரவுகளை மட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டோம். அதேபோல, அண்ணாவின் பெற்றோர் கலப்புத் திருமணம் செய்தவர்கள் என்பதால், அவரது ஜாதி பற்றியும் சிலர் விமர்சனம் முன்வைக்கின்றனர். எனவே, அவரையும் தவிர்த்துவிடலாம்.
இவற்றை தவிர்த்துவிட்டு கணக்கு பார்த்தாலும், காமராஜருக்குப் பின், பக்தவச்சலம், நெடுஞ்செழியன், ஓ.பன்னீர்செல்வம் போன்ற தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளனர்.
எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:காமராஜருக்குப் பின் முதல்வர் பதவி வகிக்கும் தமிழர் எடப்பாடி பழனிசாமி: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False