
உத்தரப்பிரதேச போலீசார் முன்னிலையில் இஸ்லாமியர் ஒருவரை வலதுசாரி ஆதரவாளர் தாக்குவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
காவலர் ஒருவர் இஸ்லாமியர் ஒருவரை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. காவலர் அருகில் சாதாரண உடையில் உள்ள நபர் அந்த இஸ்லாமியரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்.
நிலைத் தகவலில், “உ.பி போலீஸ்க்கு முன்னால் அட்டூழியம் செய்யும் சங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed Meeran Saleem என்பவர் 2019 டிசம்பர் 26ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
போலீஸ் கண் முன்பாகவே, இஸ்லாமிய பெரியவர் ஒருவரின் தாடியை ஒருவர் பிடித்து இழுக்கிறார். இந்த புகைப்படம் உ.பி-யில் எடுக்கப்பட்டது என்று பதிவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே காவலர்களுக்கு வெள்ளை நிற சீருடை உண்டு. அதனுடன் காவி சீருடையும் அவர்கள் அணிவார்கள். ஆனால், இந்த காவலர் வெள்ளை நிற சீருடை அணிந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் வங்கதேசத்தில் நடந்தது என்று பல செய்திகள் நமக்கு கிடைத்தன. அதைப் பார்த்தோம்.
Search Link |
பிளாக்ஸ்பாட் ஒன்றில் தாக்காவில் 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடந்த போராட்டம் என்று இந்த புகைப்படத்தைப் பதிவேற்றியிருந்தனர். அதில், வங்கதேசத்தின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாருடன் இணைந்து போராட்டக்காரர்களின் மீது தாக்குதல் நடத்தினார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
talukdershaheb.blogspot.com | Archived Link 1 |
call-for-humanity.blogspot.com | Archived Link 2 |
மற்றொரு பிளாக்ஸ்பாட்டில் இஸ்லாமியரை போலீசார் முன்னிலையில் தாக்கும் நபர் என்று இது தொடர்புடைய மேலும் சில படங்களை பதிவிட்டிருந்தனர். அதில் அந்த நபர் இஸ்லாமிய பெரியவரை தாக்குவதும் சுற்றிலும் நின்று பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுப்பதும் தெரிந்தது. அதிலும் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த சம்பவம் என்றே குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது Daily Naya Diganta என்ற ஊடகம் வெளியிட்ட படத்துடன் கூடிய ஃபேஸ்புக் செய்தி கிடைத்தது. அதில் கூட இந்த சம்பவம் டாக்காவில் நடந்தது என்று.குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த ஃபேஸ்புக் பக்கம் வெரிஃபைடு பக்கமாகவும் இருந்தது.
Facebook Link | Archived Link |
Daily Naya Diganta பத்திரிகை பற்றி கூகுளில் தேடினோம். அப்போது, அது வங்கதேசத்திலிருந்து வெளியாகும் வங்க மொழி பத்திரிகை என்பது தெரிந்தது. இதன் மூலம் வங்கதேசத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய படத்தை எடுத்து, உ.பி-யில் நடந்த சம்பவம் என்று பகிர்ந்திருப்பது தெரிந்தது.
நம்முடைய ஆய்வில்,
இஸ்லாமிய பெரியவரை தாக்கும் சம்பவம் உ.பி-யில் நடைபெறவில்லை என்பதும் அது வங்கதேசத்தில் நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் இந்து வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை. இவர் 2013ம் ஆண்டு வங்கதேசத்தை ஆட்சி செய்த கட்சியின் தொண்டர் என்பது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் முன்னிலையில் இஸ்லாமிய பெரியவரைத் தாக்கும் வலதுசாரி ஆதரவாளர் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:உத்தரப் பிரதேச போலீஸ் முன்னிலையில் அட்டூழியம் செய்யும் சங்கி? உண்மை விவரம்!
Fact Check By: Chendur PandianResult: False
