
உயர் சாதியினருக்கு இருக்கும் பிரச்னைக்கு, அவர்களுக்கு ரூ.20 லட்சம் வருமானம் வந்தாலும் கூட அவர்கள் ஏழைகள்தான் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழிசை கூறியதாக ஒரு தகவல் மற்றும் தமிழிசை படம் உள்ளது. தகவலில், “உயர் ஜாதியினருக்கு இருக்கும் பிரச்சினைகளை கணக்கில் கொண்டால் ஆண்டுக்கு 8 லட்சம் அல்ல 20 லட்சம் வருமானம் வந்தாலும் அவர்கள் ஏழைகள்தான் – தமிழிசை” என்று உள்ளது. இந்த நியூஸ் கார்டு 2019 ஜூலை 10ம் தேதி வெளியானது போல குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, டீ கடைகாரனின் பித்தலாட்டம் 2019 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 11ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தலாமா என்று தமிழக அரசு சமீபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதை ஆதரித்தன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், உயர் வகுப்பினருக்கு இருக்கும் பிரச்னைகளை கணக்கில் கொண்டால் ஆண்டுக்கு எட்டு லட்சம் அல்ல, 20 லட்சம் வருமானம் வந்தாலும் அவர்கள் ஏழைகள்தான் என்று தமிழிசை கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் மற்றும் படத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தந்தி டி.வி-யில் ஜூலை 10ம் தேதி வெளிவந்த நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், தமிழிசை பேட்டி தொடர்பாக ஒரு நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது நமக்கு கிடைத்தது. அதைப் பார்த்தபோது, இரண்டு நியூஸ் கார்டும் ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால், தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டின் செய்தி வேறாக இருந்தது.

அந்த கார்டில், “தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து காண்டிருக்கிறது – தமிழிசை சௌந்தரராஜன்” என்று இருந்தது. அந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவிலிருந்த தந்தி டிவி நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம். அப்போது, தமிழிசை கூறியதாக வெளியிடப்பட்டிருந்த தகவல் இருந்த பகுதியில் வித்தியாசம் இருப்பது தெரிந்தது.

வார்த்தைகள் இருந்த பகுதியில் பின்னணி டிசைன் இல்லாமல் இருந்தது. இதன் மூலம் குறிப்பிட்ட அந்த பகுதி மட்டும் அகற்றப்பட்டு, தவறான தகவல் வைத்து எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

உயர் வகுப்பினர் வருமானம் ரூ.20 லட்சமாக இருந்தாலும் அவர்கள் ஏழை என்று தமிழிசை கருத்து தெரிவித்துள்ளாரா என்று முதலில் கூகுளில் தேடினோம். அப்போது, இணையதளம் ஒன்றில் தமிழிசை ட்வீட் செய்தார் என்று மேற்கண்ட செய்தியை வெளியிட்டிருந்தனர். ஆனால், அதில் தமிழிசையின் ட்வீட் புகைப்பட ஆதாரம் எதையும் அளிக்கவில்லை.

தமிழிசை ட்வீட் செய்தது உண்மையா என்று ஆய்வு செய்தோம். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அது போன்று எந்த ஒரு பதிவும் இல்லை. ஒருவேளை எதிர்ப்பு காரணமாக அகற்றிவிட்டாரா என்று அறிய முடிவு செய்தோம்.
பா.ஜ.க அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தமிழிசையிடம் பேச முயற்சி செய்தோம். அப்போது தமிழிசையின் உதவியாளர் நம்மிடம் பேசினார். ஃபேஸ்புக்கில் பரவும் தகவல் பற்றி அவரிடம் கூறினோம். அதற்கு அவர், “இது தவறான தகவல். தமிழக பா.ஜ.க தலைவர் அப்படி எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை” என்றார்.
நம்முடைய ஆய்வில்,
உயர் வகுப்பினருக்கு ரூ.20 லட்சம் வருமானம் வந்தாலும் அவர்கள் ஏழைகள் என்று தமிழிசை கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
தந்தி டிவி நியூஸ் கார்டை ஆய்வு செய்தபோது அது எடிட் செய்யப்பட்டது என்பது தெரிந்தது.
தமிழிசை பேட்டி தொடர்பாக குறிப்பிட்ட தேதியில் தந்தி டிவி வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு நமக்குக் கிடைத்துள்ளது.
இந்த தகவலை தமிழிசையின் உதவியாளர் மறுத்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழிசை கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டில் பகிரப்படும் தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“உயர் சாதியினருக்கு ரூ.20 லட்சம் வந்தாலும் அவர்கள் ஏழைகள்தான்” – தமிழிசை பெயரில் பரவும் நியூஸ் கார்டு
Fact Check By: Chendur PandianResult: False
